• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

காவல் நான் காதல் நீயடி 36

kodi sundar

Well-known member
அத்தியாயம் 36




"கீத்"

"ம்ம்"

"தலையில ஏதோ கிரீடம் வச்சா மாதிரி கர்வமா இருக்கு"

வர்ஷினி சிரிக்க,

"அப்பா, அம்மா சும்மா என்னப் பார்த்து சிரிச்சா கூட கூச்சமா இருக்கு கீத்து"

"அப்புறம்?"

"உன் பையனுக்கு நான் கிரிக்கெட் கத்துக் குடுப்பேன்னு தினேஷ் சொல்றான். என்னால நம்ம பிள்ளையப் பத்தி அப்படி வெளிப்படையா பேச முடியல கீத்"

"ஹாஹா அப்புறம்?"

"போற வழியில ஏதாவது சின்ன பசங்களப் பார்த்தா தூக்கிக் கொஞ்சணும் போல இருக்கு"

வர்ஷினி பாசத்துடன் பார்த்தாள்.

"இந்த பஷர் ரெண்டு மூணு நாளா என் முகத்தை முகத்தைப் பார்க்கிறார். அவர்கிட்ட எப்படி சொல்வேன் கீத்து?"

வர்ஷினி வாய்விட்டு சிரிக்க,

"ப்ச் சிரிக்காத பொண்ணு. நீ ஒழுங்கா சாப்பிட மாட்டுற, மயக்கம் வேற வருது. எப்படி தான் பிள்ளையை சுமப்பியோ'னு பயமாவும் இருக்கு"

"அவ்ளோ பயமிருந்தா நீங்க சுமக்க வேண்டியது தான?"

கார்த்திக் சட்டென்று எழுந்து நின்றான்.

"என்ன சுமக்க மாட்டேன்னு நினைச்சியா, பாரு இப்போ"

என்றவன், வர்ஷினியை அப்படியேத் தூக்கிவிட்டான்.

"அய்யே! இறக்கி விடுங்க"

"ம்ஹூம், நீ பிள்ளையப் பெத்தெடுக்குற வரை, நான் உங்க ரெண்டு பேரை சுமக்குறேன்"

அன்றிலிருந்து, இப்படிக் கொஞ்ச நேரம் மனைவி, பிள்ளையைத் தூக்கி சுமப்பது அவன் வழமையாயிற்று. தாய்மை என்று பெரிதாய் புகழ்ந்து விடுகிறோம். ஆனால் தந்தைக்கும் ஒரு "மை"யுண்டு. அவன் தன் கடமைகளில் அதிகம் சுழன்று விடுவதால், பெண்ணைப்போல் அதிகம் பேசாததால் அந்த மை கண்ணுக்குத் தெரிவதில்லை.

அடுத்தநாளும், கார்த்திக் முகத்தில் இருந்த பூரிப்பைப் பார்த்து, பஷர் கேட்டே விட்டான்,

"சார், எதுவும் ஸ்பெஷலா?" என்று.

"உங்கப் பிள்ளை எப்படியிருக்கான் பஷர்?

என்று இவன் பதிலுக்குக் கேட்க, பஷருக்குப் புரிந்துவிட்டது. கார்த்திக்கை அவன் வாழ்த்த, புன்னகையுடன் தலையசைத்தான்.

கமிஷனர் அலுவலகம் சென்று கொண்டிருந்தார்கள்.

"சார், போற வழியில எத்திராஜைப் பார்த்துட்டுப் போயிடலாம்"

"ஏன் பஷர்?"

"அவர் ஏதோ கேஸ்ல மாட்டியிருக்கார் போல"

"ஓஹ், அப்ப போலாம்"

போனார்கள்.

எத்திராஜ் சல்யூட் அடித்து நின்றார்.

"என்னாச்சு?"

ஒரு ஃபைலை எடுத்துக் கொடுத்தார் அவர்.

"சார், இவ பேரு பேட்டை முனியம்மா. ஸ்கூல் வாசல்ல நின்னு, பிள்ளைங்களுக்கு கஞ்சா சாக்லேட் கொடுத்து, கடத்திட்டுப் போறது தான் இவ வேலை. நானும் இவளப் பிடிக்க எவ்ளோ முயற்சிக்கிறேன். நழுவிட்றா"

கார்த்திக் முகம் கோபமானது. பஷர் சொன்னான்..

"எனக்கு சாயந்திரம் வரை டைம் கொடுங்க. நான் பிடிக்கிறேன் இவளை"

"அதுக்கு அவசியமே இல்ல. நம்மப் பேட்டைல இப்படி ஒருத்திய நாங்க விட்ருவோமா? பிடிச்சிக்கிட்டு வந்துட்டேன் பாருங்க"

என்றபடி செந்தில் அவன் நண்பர்கள் மற்றும் பேட்டை முனியம்மாவோடு நின்றிருந்தான்.

எத்திராஜுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. செந்தில் கேட்டான்..
"கம்பத்திலக் கட்டிடலாமா அண்ணா?"

கார்த்திக்கிற்கு அதில் சம்மதமில்லை. பெண் போலீஸிடம் அவன் கண்காட்ட, அவர் உள்ளே இழுத்துச் சென்றார், அந்தப் பெண்ணை. செந்திலை அன்புடன் பார்த்தான் கார்த்திக்.

செந்தில் சொன்னான்..

"அட என்ன'ண்ணா? நம்மத் தலைவரைக் கல்யாணம் பண்ணதுல இருந்து சக்தி அக்காவையும் ஆளக் காணோம். பத்திரிக்கை ஆஃபீஸ்ல வேலைப் பார்த்து எனக்கு அலுத்துப் போச்சு. என்னை உங்கக் கூடே வச்சிக்கோங்க"

"டேய், நீ இன்னும் ப்ளஸ் டூவே முடிக்கல. உனக்கு சார் கூட இருக்கணுமா?" என்றான் பஷர்.

கார்த்திக் சிரித்துவிட்டு சொன்னான்..
"சீக்கிரமே உன்னைக் கூட்டிக்கிறேன் டா"

"ஆன் அது"
என்று சிரித்தான் செந்தில்.

நந்தகுமாரிடம், கார்த்திக் இவ்விஷயத்தைப் பகிர்ந்து கொண்டான். வீட்டில், பள்ளியில் பாதுகாப்பாக இருக்கும் பிள்ளைகள், சமூகத்தோடு கலக்கும்போது நேரிடும் அபாயங்கள் அவனுக்கு அதிர்வைக் கொடுத்திருந்தது.

"ஏதாச்சும் செய்யணும் நந்துப்பா"
என்றான்.

இரவு சாப்பிடும் நேரம், இதேப் பேச்சு தொடர, வர்ஷினி சொன்னாள்..

"ஏன்? நீங்க'லாம் விஐபிங்களுக்கு தான் பாதுகாப்புத் தருவீங்களா, ஸ்கூல் பிள்ளைங்களுக்குத் தர மாட்டீங்களா?"

"தடுக்கி விழுந்தா ஒரு ஸ்கூல் இருக்கு கீத்து. சென்னையில மொத்தம் நூத்தி முப்பத்தஞ்சு போலீஸ் ஸ்டேஷன் தான் இருக்கு. எல்லா ஸ்கூலுக்கும் எப்டி பாதுகாப்பு கொடுக்க முடியும்? இத்தனைக்கும் நாங்க ஸ்கூல் டைமிங்ல ரோந்து போறது வழக்கம்"

"சரி, எல்லா ஸ்கூலுக்கும் வேணாம். முதல்ல கவர்ன்மெண்ட் ஸ்கூலுக்கு மட்டும் கொடுங்க. உங்களைப் பார்த்து பிரைவேட் ஸ்கூல், தானா ஸ்ட்ராங்கான பாதுகாப்பு வைப்பாங்க தான?

"....."

"தனக்கு ஏதாவது சிரமம்'னா சொல்லிக்க போலீஸ் இருக்காங்க அப்படிங்கிறது, அந்தப் பிள்ளைகளுக்கு எவ்ளோத் தெம்பா இருக்கும்?"

வர்ஷினி விடாமல் வாதித்ததைப் பார்த்து நந்தகுமார் சிரித்தார்.

"நீ சொன்னதுக்காகவே செஞ்சிடலாம் வர்ஷினி'மா" என்றார்.

அறைக்கு வந்தபின்பு சொன்னான்..
"இப்பப் புரியதுடி, உன் ஸ்கூல் வாசல்ல துப்பாக்கியோடக் காவல்காரனா நிப்பேன்னு, நான் அன்னைக்கு சொன்னதை மனசுல வச்சிக்கிட்டு தான இந்தப் பிளான் போடுற?"

வர்ஷினி சிரித்தாள்.
"ஏன் நிக்க மாட்டீங்களா மிஸ்டர் போலீஸ்கார்?"

"நிப்பேன்டி நிப்பேன், பதிலுக்கு இந்தப் போலீஸ்காரனுக்கு என்ன தருவ?"

"உங்கப் பிள்ளையைத் தருவேன்"

என்றவள், அவன் மடியில் அமர்ந்துவிட, ஒழுங்காக சாப்பிடாமல் ஒட்டிக்கிடந்த அவள் வயிற்றில் அவன் கை ஊர்ந்து, அவனுக்குப் பிடித்த இடத்தை நெருடியது. வர்ஷினி அவனைப் பார்த்து திரும்பி அமர்ந்தாள். இருக்கும் அன்பையெல்லாம் சேர்த்துப் பிசைந்து காமம் செய்தார்கள்.

பின்பான நாட்களில், குமரனை வயிற்றில் சுமந்து பள்ளிக்கு சென்று வந்தாள் வர்ஷினி. கார்த்திக்கும் தன் பணியில் மும்மரமாக இருந்தான். கமிஷனர் நந்தகுமார் போடும் திட்டங்களில், காவல் அதிகாரிகள் செயல்பட, மாநகர மக்களுக்கு,

"காவல்துறை உங்கள் நண்பன்"

என்ற பழைய நம்பிக்கை திரும்பி வந்திருந்தது. எனினும் கார்த்திக்கின் தனிப்பட்ட விருப்பம் என்பது, போதைப் பழக்கத்தை ஒழிப்பதுதான். அரசாங்கமே குடிக்கும், போதைக்கும் மறைமுக ஊக்கம் தந்ததில் அடியோடு அதை ஒழிக்க முடியாது போனாலும், போதை மருந்து கடத்தலை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, கபிலனைப் போன்றோர் கொஞ்சம் அடக்கியே வாசித்தனர்.
இந்த நேரத்தில்,

"தாஸ்" படம் முழுதும் தயாராகிவிட, அதன் சிறப்புக் காட்சியைத் தன் குடும்பத்திற்குப் போட்டுக் காட்டினார், அதன் தயாரிப்பாளரான ஆனந்தன். முன்னர் சொன்னது தான்..

பெயர் போடும் தொடக்கக் காட்சியில், கார்த்திக் தன் அரசாங்க வாகனத்தை, வேகமாக ஓட்டிக்கொண்டு வர, அவனுக்கு இணையாக ரிஷி ஓடிவரும் காட்சி போடப்பட்டு, ரிஷியின் நிஜவாழ்வின் நண்பன்...

"கார்த்திகேயன் ஐபிஎஸ்"

என்று பெயர் காட்டப்பட்டதோடு, படம் முடிகையில், கார்த்திக், ரிஷியை உள்ளங்கையில் தூக்கி நிற்கும் காட்சியும் இருக்க, கார்த்திக் திகைத்தான்.

"டேய், என்னங்கடா இது?" என்றான்.

"ண்ணா, என் மொபைல்ல வச்சிருந்த வீடியோவை டைரக்டர் சார் பிடுங்கிட்டார்" என்றான் தினேஷ்.

"நீயே எடுத்துக் கொடுத்துட்டு பொய்யா சொல்ற"

என்றவன், வர்ஷினி, சக்தியைத் தாண்டி தம்பியைத் தொட முயல,

"டிஸ்டர்ப் பண்ணாம படம் பார்க்க விடு'ண்ணா"

என்று சிணுங்கினாள் சக்தி.

"ஓஹ், இந்த ரௌடிப் பயலுக்கு நீங்க எல்லாரும் சப்போர்ட்டா?"

என்று சொல்லி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ரிஷியைப் பார்க்க, ரிஷியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அன்பாகச் சொன்னான்..

"இந்தப் படமே உனக்காக தான கார்த்தி, நீ இல்லாம எப்படி?"

பதிலாகக் கார்த்திக் சொன்னான்..
"கீத்துவ கூட சமாளிச்சிருவேன்டா. உனக்கு சொல்ல தான், என்கிட்ட எந்த பதிலும் இருக்க மாட்டுது"

ரிஷிதர் சிரிக்க, வழமைபோல் அவன் சுருண்ட முடிக்கற்றையைப் பிடித்து ஆட்டினான் கார்த்திக்.

படம் மிகவும் நன்றாக வந்திருக்க, அடுத்தநாள் தியேட்டரில் வெளியானது. முதல் நாள் காட்சி ரசிகர்களின் ஆரவாரத்தோடுத் தொடங்க, ஆட்டம்போட்டு சீழ்க்கையடித்து, தன் நண்பர்களுடன் கொண்டாடித் தீர்த்தான் செந்தில். அடுத்தடுத்த நாட்களில் படம் அத்தனை மொழிகளிலும் சக்கைபோடு போட்டது.

இந்த வெற்றியைக் கொண்டாட, கடற்கரை வீட்டில் வந்து தங்கினர் இரண்டு ஜோடிகளும். மாலையில் காற்று வாங்கியபடி, வீட்டின் முன்புறம் அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது தயாரிப்பாளர் ஒருவர் அங்கு வந்து நின்றார். ரிஷி சொன்னான்..

"எதுவா இருந்தாலும், ஆஃபீஸ்ல போய் என் பிஏ கிட்ட பேசுங்க. இங்க நான் யாரையும் பார்க்க மாட்டேன்"

"சார், நான் பார்க்க வந்தது, இவரை"

என்று அவர் கார்த்திக்கைக் காட்ட,

"என்ன வேணும்?"
என்றான் கார்த்திக்.

"என்னோட அடுத்தப் படத்தில நீங்க ஹீரோவா நடிக்கணும்"
என்றார்.

வர்ஷினியும், சக்தியும் திகைக்க, கார்த்திக் ரிஷியை தான் முறைத்தான்.

"ஹாஹாஹா, கார்த்தி இதுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. தாஸ் படத்துல உன்னைப் பார்த்துட்டு வந்திருப்பார்"

"அதுக்கும் நீதானடா காரணம்?"

"இல்ல கார்த்தி, நீ ஹீரோ மாதிரி இருக்க. அதான் காரணம்"

"டேய் உன்ன?"

என்றபடி, கார்த்திக் ரிஷியை விரட்டிச் சென்றான். சக்தி அந்த நபரிடம் எதையோ சொல்லி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்ப, விளையாட்டும் சண்டையுமாக இருவரும் மோதிக் கொண்டிருந்தனர். அதை, வர்ஷினியோடு சேர்ந்து ரசித்துப் பார்க்க, வர்ஷினி சொன்னாள்..

"ஒரு புறாவைக் காப்பாற்றத் தன் தசையை வெட்டிப் பருந்துக்குக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி பெயரை இந்தப் படத்துக்கு வச்சது எவ்ளோ பொருத்தம். இல்ல சக்தி?"

"எப்படி சொல்ற வர்ஷி?"

"ரிஷியண்ணாவும், தன் நட்பைக் காப்பாற்ற, தன் சுயத்தை விட்டுக் கொடுத்தார் தான?"

சண்டையை நிறுத்திவிட்டு, ரிஷி வர்ஷினியை அன்புடன் பார்க்க,

"இப்படி தான்டா பேசிப்பேசி ஆளை மயக்குவா"
என்றான் கார்த்திக்.

கிடைத்த சின்னத் தனிமையில், வர்ஷினி அவனிடம் கேட்டாள்...

"அப்படி என்ன நான் பேசி மயக்கினேன், அப்படி என்ன நீங்க மயங்கிட்டீங்க?"

"சொல்லிடுவேன், ரிஷி பைய காதுல விழுந்துடும்'னு பாக்குறேன்"

"அவர் காதுல விழாம, என் காதுல மட்டும் சொல்லுங்க"

கார்த்திக் திரும்பிப் பார்த்தான். இவர்கள் போல் அச்சமெதும் இல்லாமல் தங்களை மறந்து காதல் செய்திருந்தார்கள் ரிஷியும், சக்தியும். எனவே அவளை இழுத்து தன் முன்னே நிறுத்திக் கேட்டான்..

"சொல்லட்டா?"

"ம்ம்ம். சொல்லுங்க"

"வாய் மொழியில் தமிழ் பேசி மயக்கின"

வர்ஷினி சிரிக்க, விரலால் தொட்டுத்தொட்டு சொன்னான்..

"இதோ கன்னக்குழியில் என்னைக் கட்டி மயக்கின"

"அப்புறம்?"

"கழுத்துக் குழியில் தாகம் காட்டி மயக்கின"

"ஆஹான், அப்புறம்?"

"நெஞ்சுக்குழியில் காமம் தந்து மயக்கின"

வர்ஷினி அமைதியாகிவிட,

"வயிற்றுக்குழியில் பிள்ளை தந்து மயக்கின"

என்றவன், அவள் மீது சாய்ந்து, காதுக்குள் பாடினான்..

"மயக்கம் தந்தது யார் தமிழோ, அமுதோ, இவளோ"

இப்போது மயங்கி நின்றாள் வர்ஷினி.

"நீ சொல்லுடி"
என்றான்.

பட்டென்று கண்களைத் திறந்து சொன்னாள்..

"பார்த்த நிமிஷமே காக்கிச் சட்டையில் மயக்கினீங்க"

வாய்விட்டுச் சிரித்தான் அச்சு வெல்லக்கட்டி கார்த்திக்.

இத்தனை மகிழ்வுக்கும் காரணமான "சிபிதாஸ்" படத்தின் வருமானத்தை, பள்ளிக்கூடம் கட்ட மட்டுமே செலவிட்டார் ஆனந்தன். கட்டிடத்தை அழகாக எழுப்பியிருந்தான் வீரா. வர்ஷினியின் வயிற்றுப் பிள்ளை போலவே அதுவும் வளர்ந்து கொண்டிருந்தது.

கல்விக்கூடம், விளையாட்டுத் திடல், கலையரங்கம் என்று பார்த்துப் பார்த்து ரசித்து வரைந்த அழகான ஓவியமாக உருவானது.. அந்த வள்ளுவர் கல்விக்கூடம்.

இது, இவ்விதம் இப்படியிருக்க,

ஷூட்டிங் என்ற பெயரில் தன் மனைவியை நாடுநாடாக அழைத்துச் சென்று, பல ஹனிமூன்கள் கொண்டாடினான் ரிஷிதர். ஒவ்வொரு முறையும் அவனோடு சந்தோஷமாகவே பயணித்த சக்தி,
 
"போ சிபு, எனக்கு வீடே மறந்து போச்சு"

என்று சலித்துக்கொள்ள,

"அப்ப, வீட்லே கிட"

என்றுவிட்டு அவன் அடுத்தப் பயணத்துக்குத் தனியாகக் கிளம்ப,

"ஹான், நானும் வருவேன்"

என்று அவனோடு தொற்றிக் கொண்டாள் சக்தி.

"சகி, சகி"
என்ற அவன் காதல் உளரல்களில் கரைந்தவள்,

"நீ என் பேரைதான் சொல்றியா சிபு?"
என்று சந்தேகம் கேட்டாள்.

ரிஷிதர் சிரித்தான்.
"நீயென் சகமானாவள், என் ப்ரியசகி, நீயேயென் சக்தி" என்று விளக்கம் சொல்ல,

"நீ ரொம்ப நல்லவன் சிபு" என்று கொஞ்சினாள் சக்தி.

"யார் சொன்னா? நீயும், உன் அண்ணனும் இன்னொரு முறை, என்னைவிட்டு விலகிப் பாருங்க, அப்பத் தெரியும்.. நான் எவ்ளோ கெட்டவன்னு"

சக்தி சிரிக்க,

"கார்த்தி மாதிரியே சிரிக்கிற சகி"
என்றான் ரிஷிதர். இப்படி எல்லையற்ற அன்பில் திளைத்தவர்களுக்கு, இப்போதைக்குக் குழந்தை என்பது தேவைப்பட்டிருக்கவில்லை. கார்த்திக்கின் பிள்ளையைத் தான் ஆவலாக எதிர் பார்த்திருந்தனர்.
~~

அடுத்த சில நாட்களில், நிஷாவிற்குக் குழந்தைப் பிறந்துவிட, நந்தகுமார், மங்கை உட்பட அனைவரும், நிஷாவைப் பார்க்கத் திருச்சிக்குக் கிளம்பினர். தினேஷ், கார்த்திக் காதில் சொன்னான்...

"அண்ணா, பிரியாவும் நம்ம கூட வந்தா நல்லாயிருக்கும்"

"அவ்ளோ தான? கொஞ்ச நேரத்தில அவ இங்க இருப்பா"
என்றுவிட்டான்.

எத்திராஜிடம், அவன் விஷயம் சொல்ல, மனிதர் ஆடிப் போய்விட்டார், அசந்து விட்டார், சிலையாக நின்றுவிட்டார். நந்தகுமாருக்கு சம்மந்தியா? மயக்கம் வந்தது அவருக்கு.

பின்னர், பாட்ஷா பட வில்லன் தன் மகள் நக்மாவை ரஜினியுடன் அனுப்பி வைப்பது போல் பணிவுடன் அனுப்பி வைத்தார் பிரியாவை.

நிஷாவைப் போன்றே துறுதுறுவென்று பெண் பிள்ளை.

"மிலிட்டரி இனி ரெண்டு நிஷாவை சமாளிக்கணும்"

என்று கேலி செய்தான் தினேஷ். பிரேம் காதில் அது விழுந்து விட, திருப்பிப் பார்த்தான் அவன்.

"உண்மையை தான சொன்னேன்?"

என்று தினேஷ் கெத்தாக சொல்லி சமாளிக்க, பிரேம் உட்பட அனைவரும் சிரித்தனர். வயிற்றுப் பிள்ளையோடு, வர்ஷினி அக்குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச, அனைவர் கண்களுக்கும் அழகாக இருந்தது அக்காட்சி.

அன்றிரவு, அனைவரும் வர்ஷினி வீட்டில் தங்கினர். அடுத்த நாள், ரிஷியும், வர்ஷினியும் சமைக்க, தங்கையுடன் சேர்ந்து கார்த்திக் அவர்களை கிண்டல் செய்து சிரித்ததை, நந்தகுமார் ஆச்சரியமாகப் பார்த்து ரசித்தார். தினேஷ், பிரியா எங்கென்றே தெரியவில்லை. காதல் பறவைகள் எங்கோ பறந்திருந்தன.

அடுத்து, வர்ஷினிக்கும் ஏழு மாதங்கள் நிறையப்போக, வளைகாப்பு நடத்தினர். தந்தை அவளுக்கென சேர்த்த நகைகளை எல்லாம் போட்டுக்கொண்டு, மனையில் அமர்ந்து வளையல்கள் போட்டுக் கொண்டாள் வர்ஷினி.

பிள்ளை சுமக்கும் அறிகுறியாக, அவளுக்கு எந்த உணவும் சுவை பிடிக்காமல் இருந்தது. பெரிய உணவகங்களில் கார்த்திக் வாங்கிக் கொடுத்தும் கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. எனவே விதவிதமான உணவுகளை சமைத்து வரிசை வைத்தார் உமா.

ஒரு பெரிய தட்டில் சின்ன சின்ன கிண்ணங்களில் அவற்றை அடுக்கிக் கொண்டு, ஒன்றொன்றாய் தன் மனைவிக்கு ஊட்டி விட்டான் கார்த்திக்.

"பிடிக்கல, பிடிக்கல"

என்று சொல்லிக்கொண்டே வந்தவள், தாளித்துக் கொட்டிய தயிர் சாதத்தை சப்புக்கொட்டி சாப்பிட, வியந்து கேட்டான்..

"இதுவா பிடிச்சிருக்கு?"

"ம்ம்ம்"
என்றாள்.

கன்னத்தில் கைவைத்து விட்டான் கார்த்திக். வயிற்றுப்பிள்ளை செய்யும் லீலைகள்.
~~

அடுத்த சந்தோஷ நிகழ்வாக பள்ளிக்கூடக் கட்டுமானம் முடிந்திருந்தது. அதற்கு முன்னமே முழுப்பரிட்சை முடிந்திருக்க, வர்ஷினி அந்த பள்ளியிலிருந்து, விடைபெற்றுக் கொண்டாள்.

திறப்புவிழா பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ரிஷி சொன்னான்..

"கார்த்தி, வர்ஷியே ஸ்கூல திறக்க சொல்லலாம்"

"வேணாம் டா"

"அப்போ அமைச்சர் யாராவது?"

"வேணாம் டா"

"சரி, உன்னோட நந்துப்பா?"

"வேணாம் டா"

"பின்ன வேற யார் தான் கார்த்தி?"

கார்த்திக் எழுந்து வந்து ரிஷியின் தோள்களைப் பற்றிக் கொண்டு சொன்னான்...

"உன்ன விட சிறந்தவன் வேற யாரும் இல்லை ரிஷி. நீதான் திறக்கணும்"

சொன்னதுபோல், ரிஷி திறந்துவைக்க, தன்னோடு வர்ஷினியையும் சேர்த்துக் கொண்டான். வீராவும், விழாவில் கலந்து கொண்டு விடைபெற்றான். அன்றே பள்ளியின் அட்மிஷனும் தொடங்கியது.
~~~

இப்போது, கார்த்திக் பணிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அறை வாசலில் நிழலாட, பெல்ட் போட்டுக் கொண்டே நிமிர்ந்து பார்த்தவன்,

"வாங்க வாங்க, அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இப்பதான் நம்ம ரூமுக்கு வர வழி தெரிஞ்சுதா?"

என்றான்.

தேர்போல் அசைந்து, வந்து கொண்டிருந்தாள் வர்ஷினி. தாய்மைக்குரிய அத்தனை அழுகுகளும் அவளிடம் இருந்தன. இரு கைகளிலும் கண்ணாடி வளையல்கள்... சத்தமிட்டு, சத்தமிட்டு தந்தை, பிள்ளையை உசுப்பிக் கொண்டிருந்தன. குனிந்து வர்ஷினியின் வயிற்றைப் பார்த்து,

"டேய் குமரா"
என்றான்.

தாயின் வளையல் சத்தம் கேட்குமெனில் தந்தையின் குரல் கேட்காதா என்ன? அசைந்து காட்டியது பிள்ளை. வயிற்றின்மேல் அது தெரிய,
"பார்த்தியா என் பிள்ளைய?" என்றான்.

"ஏன், எனக்கும் தான் பிள்ளை"
என்றாள் வர்ஷினி.

"பார்க்கலாமா?"
என்றவன், மீண்டும் குனிந்து பேசினான்...

"டேய் குமரா, நீ அம்மா பிள்ளை'னா ஒருவாட்டி உதை. அப்பா பிள்ளை'னா ரெண்டு வாட்டி உதை" என்றான்.

தந்தை குரலில் பிள்ளை உற்சாகமானது போலும். தாறுமாறாக கையைக்காலை அசைக்க, அதன் அச்சு மூன்று இடங்களில் வயிற்றின் மேற்பரப்பில் அப்பட்டமாகத் தெரிந்து, தாய் தந்தையை சிலிர்க்க வைக்க, அந்த இடங்களில் தடவிக் கொடுத்தான் கார்த்திக்.

பின்னர், மனைவியைக் கட்டிலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான். அருகே மேஜையில், அவளின் "எம்ஏ" படிப்பிற்கான புத்தகங்கள். தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தாள்.

"குமரன் இப்பவே பெரிய பாடம்'லாம் படிக்கிறான் போல. இதுவரை எத்தனைத் திருக்குறள் சொல்லிக் கொடுத்திருக்க?"

"ம்ஹூம், நான் ஒரே ஒரு குறள் தான் அவனுக்கு சொல்லிக் குடுப்பேன். அதை மட்டும் அவன் பின்பற்றினாலே போதும்"

"என்ன குறள்?"

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"

"கீத்து"
என்றபடி, அவள் முன் மண்டியிட்டுவிட்டான் கார்த்திக். அவள் மடியில் கையூன்றி சொன்னான்..

"இப்போ'லாம் பத்தாவது முடிச்சதோட தமிழ் மறந்துடுது கீத்து. வீட்டை விட்டு இறங்கினா எதுலயும் ஆங்கிலம் தான். அதுவே பழகியும் போச்சு. நீ சொல்லிசொல்லி தான் தமிழ்'ல கையெழுத்துப் போடறேன் இப்போ"

"பின்ன என்னங்க, தாய் போல தான, அவரவர் தாய்மொழியும், அதை ஒதுக்கலாமா?"

"உண்மை தான் கீத்து, நம்ம குமரன் ரொம்ப குடுத்து வச்சவன். உன்கிட்ட தமிழ் படிப்பான்"

வர்ஷினி சிரிக்க,

"எனக்கும் இப்போ சொல்லிக்கொடு கீத்து" என்றான்.

சொன்னாள்..
"தோள் கண்டேன் தோளே கண்டேன்: தாள் கண்டேன்
தாளே கண்டேன்"

"அப்படின்னா?"

அவன் தோள்மீது சாய்ந்து சொன்னாள்...
"உங்க அழகை ரசிக்கிறேன்"

"ஹாஹாஹா, நான் அழகாவா இருக்கேன்?"

"ம்ம்ம், ரொம்...ப கார்த்தி'பா" என்றாள்.

பிரசவ நாள் நெருங்க, நெருங்க, வர்ஷினிக்கு பதட்டம் வந்தது. அடிக்கடி வெற்றியின் புகைப்படத்தின் முன் நின்று வேண்டிக் கொண்டாள். கார்த்திக், தன் கூடவே இருக்க வேண்டும் என்றும் விரும்பினாள். அவனோ தாமதமாகவே வர, அவளுக்குக் கோபம் வந்தது. இன்றும் அப்படித் தாமதமாக வந்தவனை, கட்டிலில் சாய்ந்தபடி முறைத்தாள்.

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவன் உடை மாற்ற, பௌடர் டப்பாவை அவன் மீது எறிந்தாள். கேட்ச் பிடித்துவிட்டான்.

"ஏய் என்ன?"

"பின்ன, லேட்டா வரீங்க?"

"சீக்கிரமா வந்துட்டா மட்டும்?"

"ஏன் வந்தா என்ன?"

"சொல்லமாட்ட பின்ன? நீ பாட்டுக்கு சாயந்திரம் ஆனா, ஜாலியா வெந்நீர்ல குளிச்சிட்டு, வயிறு முழுக்க கிரீமை பூசிட்டு சாஞ்சிட்ற"

வர்ஷினி திகைத்துப் போய் அவனைப் பார்க்க, அவன் கண்களில் தாபம்...

"என்னை நீ கண்டுக்கிறதே இல்ல கீத்து"

கோபம் குறைந்து,
"என்ன செய்யணும்?" என்றாள்.

அவனும் தாபம் குறைத்து,
"அட்லீஸ்ட் அந்தக் க்ரீமாவது நான் பூசி விடலாம் தான?" என்றான்.

கிரீமை எடுத்து அவன் மீது வீசினாள். இம்முறையும் கேட்ச் பிடித்து, அருகில் வந்தவன், மேக்ஸியை ஒதுக்கி, கிரீமை பூசிக்கொண்டே கேட்டான்...

"ஏன் கீத்து, குமரன் பிறந்தவுடனே வயிறு சின்னதாகிடும்'ல?"

வர்ஷினி முறைக்க,
"சொல்லு கீத்து"
என்றான்.

"ஏன் அப்படியே இருந்தா என்ன இப்ப? உங்க போலீஸ்காரங்க எத்தனை பேர் காலம் முழுக்கத் தொப்பையோடு திரியிறாங்க?"

"அடி என் கீதாப்பொண்ணு, உன்னப் பத்திக் கேட்டா, உன்னப் பத்தி மட்டும் சொல்லு"

"ஆன், அதெல்லாம் சரியாகிடும். நீங்க ஒழுங்கா பூசி விட்டு தள்ளிப்போங்க"

போகவில்லை அவன். க்ரீம் பூசிய மொழுமொழு வயிற்றில் விரலால் கோலமிட்டான். வர்ஷினி கண்களை மூடிக் கொள்ள, கார்த்திக்கின் முகம் பளிச்சென்று ஆனது. அருகில் வந்து காதில் கேட்டான்..
"கீத் வேணுமா?"

"ம்ம்ம்"

"எனக்கும்"

என்றவன், இதமாய், பதமாய் நடந்து கொண்டான்.

அடுத்த ஒரு வாரம் செல்ல, காலையில் விழிக்கும் போதே, இடுப்பில் "சுரீர்" என்ற வலியுடன் எழுந்தாள் வர்ஷினி. கார்த்திக்கைப் பார்க்க, அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். சில நிமிடத்தில் வலி நின்றுவிட, எழுந்து குளித்து வந்தவள், சேலை அணிய மீண்டும் வலித்தது. பல்லைக் கடித்துத் தாங்கிக் கொண்டவள், கார்த்திக்கை நெருங்கும் நேரம்,

"எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான்"

என்று கார்த்திக்கின் மொபைலில், தினேஷின் பாடல் பாட, அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தான், கார்த்திக்.

"கீத்து"

"வலிக்குதுங்க"

அடுத்தக் கொஞ்ச நேரத்தில், அனைவரும் மருத்துவமனையில் இருந்தனர். இன்னும் நிலவின் இனிய ஒளி மிச்சமிருக்க, சூரியனும் மேலெழுந்து தன் கதிரை விரிக்க, கார்த்திகேயனின் குமரன், பிறந்திருந்தான்.

குழந்தையைக் கொண்டு வந்த நர்ஸ், யாரிடம் கொடுக்க? என்று கேட்க, கார்த்திக் நந்தகுமாரைக் காட்டினான்.

நந்தா ரசித்து, மங்கை ரசித்து, தினேஷ் கொஞ்சி குழந்தை கார்த்திக்கிடம் வந்தது. அரைகுறை உறக்க நிலையில் பிள்ளை இருக்க,

"டேய், குமரா"
என்றான் கார்த்திக்.

தந்தை குரல் கேட்டது தான், வயிற்றில் இருக்கும் நினைவுடன், கையைக் காலை அசைத்து, அவன் நெஞ்சில் மிதித்தது பிள்ளை. அந்த சுகம்... தந்தைகள் மட்டுமே அறியும் சுகம்.

=========

சரியாக, மூன்று வருடம் கழித்து, இதே மருத்துவமனையில், ரிஷி, சக்தியின் பிள்ளைப் பிறப்புக்காக அனைவரும் காத்திருந்தனர்.

பிறக்கும் குழந்தையைத் தாய்மாமன் தான் முதலில் பார்க்க வேண்டும் என்பது மிருதுளா குடும்பத்துப் பழக்கம். தாய்மாமன் என்பது, தாய்க்கு சமமானவன் அல்லவா? குழந்தையும் பிறந்துவிட, கார்த்திக்கும், தினேஷும் அறைக்குள் அழைக்கப்பட்டனர். உள்ளே சென்றவர்கள்,

"தினேஷ் நீ தூக்கிக்க"

"ம்ஹூம், நீதான் முதல்ல அண்ணா"

கார்த்திக், வெளியே வந்தபோது, அவனின் இருகைகளிலும், ஆண் ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக ஏந்தி வந்தான். இரட்டைக் குழந்தை ரிஷிசக்திக்கு. நண்பனையும், தன் பிள்ளைகளையும் ரிஷி புன்னகையுடன் பார்த்திருக்க, அருகே அழைத்தான்..
"வாடா இங்க"

வந்தான்.

"இந்தா உன் பிள்ளைங்க, வாங்கிக்க"

"உனக்கு தான் கார்த்தி"

"என்ன?"
கார்த்திக் திகைக்க,

ரிஷி, தன் மகனைத் தொட்டுச் சொன்னான்..
"இவன் குமரனோட நண்பன்"

தன் மகளின் தலையைக் கோதி சொன்னான்..
"இவ, குமரனோட சகி"

அந்த ரிஷ்ய ஷ்ருங்காரனுக்கு, பதில் சொல்ல, வார்த்தை என்ன வார்த்தை, ஒரு எழுத்து கூட இல்லை கார்த்திக்கிடம்.


"முழுதாய் நேசிக்கும்
ஒருவர் கிடைத்து
விட்டால்
வாழ்வென்பது வரம்"

தொடரும்...

அடுத்தொரு பெரிய பதிவு கடைசி பதிவு
 
😲 எல்லாம் வேக வேகமா நடந்திட்டுது. குமரனும் வந்தாச்சு, அவனுக்கு ஜோடியும், நண்பனும் கூட வந்தாச்சு. 😜😂😂😂

ரொம்ப அழகா சின்ன சின்ன விஷயங்களை கூட நல்லா எடுத்துச் சொல்லியிருக்கீங்க 🥰🥰🥰
 
😲 எல்லாம் வேக வேகமா நடந்திட்டுது. குமரனும் வந்தாச்சு, அவனுக்கு ஜோடியும், நண்பனும் கூட வந்தாச்சு. 😜😂😂😂

ரொம்ப அழகா சின்ன சின்ன விஷயங்களை கூட நல்லா எடுத்துச் சொல்லியிருக்கீங்க 🥰🥰🥰
ரொம்ப நன்றி பா 🤗💜
 
Back
Top