• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

காவல் நான் காதல் நீயடி 37 இறுதிப் பகுதி

kodi sundar

Well-known member
Screenshot_20251028_222755_Kindle.jpgஅத்தியாயம் 37


1

ரிஷிசக்தியின் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, மும்பைக்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் கார்த்திகேயன். கடந்த இரண்டரை ஆண்டுகளில், இப்படி சென்னைக்கும், மும்பைக்குமான பயணங்களின் எண்ணிக்கைக் கணக்கிலடங்காது. குமரன் கூட சமத்தாக டாட்டா காட்டி விடுவான். ஒவ்வொரு முறையும் முறைப்புடன் வழியனுப்பும், வர்ஷினியை நினைத்து சிரிப்பு வந்தது அவனுக்கு. ஜன்னல் வழி பார்த்தவாறு கடந்துவிட்ட மூன்று ஆண்டுகளை நினைத்துப் பார்த்தான் கார்த்திக்.

கைக்குழந்தையாக குமரனைக் கையில் ஏந்திக் கொஞ்சிய நாட்கள்... பிள்ளை நினைவு வந்துவிட்டால், பணியிலிருந்தும் ஓடி வந்து விடுவான் கார்த்திக். குமரனும்.. தந்தை ஒளிந்திருந்தாலும் அறிந்து கொண்டு, கைகால் உதைத்து ஆர்ப்பரிப்பான். அதைக் காண்பதில் கார்த்திக்கிற்கு அப்படியொரு சந்தோஷம்.

இரவில் பிள்ளைக்குப் பசியாற்றி இவனிடம் கொடுத்து விடுவாள் வர்ஷினி. மகனைத் தூங்கவைக்க கார்த்திக் பாடும் தாலாட்டு, குமரனை மட்டுமல்ல, வீட்டில் அனைவரையும் தூங்க வைத்தது.

"ஆரிரோ, ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு"

என்று கார்த்திக் பாட ஆரம்பித்தால், டைகர் கூட ஹாலில் சுருண்டு விடும். இப்படியெல்லாம் அருமை பெருமையாக வளர்த்தப் பிள்ளை,

"அப்பா, அம்மா"
என்று அழைப்பான் என்று காத்திருக்க, குமரன் முதலில் அழைத்ததோ...
"அத்த"

சக்திக்குப் பெருமை தாங்கவில்லை. அவனை அத்தையென்று திரும்ப, திரும்ப சொல்லவைத்துக் கேட்டவள், குமரனை வாக்கர் சீட்டில் அமரவைத்து, அவன் முன்னே டான்ஸ் ஆடிக் கொண்டாடினாள். அவள் ஆட்டத்தைக் கண்டு, பிள்ளையும் குதியோ குதியென்று குதிக்க, அன்றிரவு யாரும் தூங்கவில்லை.

"பாரு சிபு, அவன் என்ன'தான் கூப்பிடுறான்"

என்று ரிஷியின் மார்பில் சாய்ந்து அழுதாள் சக்தி. அத்தை, சித்தி என்று விளிக்கப்படும் பட்டங்களும் பெருமை வாய்ந்ததுதான் அல்லவா?

பொதுவாக பெண் பிள்ளையின் உடல் வளர்ச்சி அத்தையைக் கொண்டும், ஆணினது தாய்மாமனைக் கொண்டும் இருக்கும் என்பார்கள். இங்கு, சக்திக்கும், குமரனுக்குமான பிரியம் அலாதியானது.

குமரனின் மூன்று மாதத்தில், வர்ஷினி புது பள்ளிக்கூடத்தின் பொறுப்பை ஏற்க சென்றுவிட, குமரனைப் பார்த்துக் கொண்டது, மங்கையும், சக்தியும் தான். ரிஷி ஷூட்டிங் கிளம்பியவுடன், அண்ணன் மகனைக் காண வந்துவிடும் சக்தி, அவனை வளர்த்தவிதம் என்பது ஒரு ஹைக்கூ கவிதை.

அவளும் சிறு பிள்ளையாக மாறிப் போட்ட ஆட்டங்கள், குமரனுக்கு இணையாக நந்தகுமாரின் மார்பில் சாய்ந்தாடிய அழகெல்லாம் தென்றல் கதைகள். வீட்டிலிருந்தால் தினேஷும் இவர்கள் ஆட்டத்தில் சேர்ந்து கொள்வான்.

இப்போது அதை நினைக்கையில், விமானத்தில் பறந்து கொண்டிருந்த கார்த்திக், லேசாகப் புன்னகைத்தான். கூடவே, வர்ஷினி முதல் நாள் பள்ளிக்குச் சென்றதையும் நினைத்துப் பார்த்தான்...

தூங்கும் மகனுக்கு கண்ணீருடன் முத்தமிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினாள் வர்ஷினி. ஆனந்தன் அவளுக்கு வாகன ஏற்பாடு செய்திருக்க, அதை ஓரம் நிறுத்திவிட்டு, மனைவியைத் தானே அழைத்துச் சென்றான் கார்த்திக். பள்ளியில் வர்ஷினி ஆசைப் பட்டதுபோல், நுழைவு வாயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும்,

பள்ளி வளாகத்தின் முன் புறத்தில், எழுத்தாணிப் பிடித்து எழுதும் வள்ளுவர் சிலை அமைக்கப் பட்டிருந்தது. சிலைமுன் நின்று வணங்கிய வர்ஷினி, பெறப்போகும் கல்வியால், மாணவர்கள் மேன்மை அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அப்படி அவள் வேண்டியதை, மாணவர்கள் பார்த்துவிட்டு, தாங்களும் வேண்டிக் கொள்ள, பின்னர் அதுவே அன்றாட வழக்கமானது எல்லோருக்கும்.

பிரேயருக்காக மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நின்றிருக்க, வர்ஷினி மைக்கில் பேசினாள். அவளை விட்டுவிட்டுக் கிளம்பப்போன கார்த்திக், போகாது நின்று, அவள் பேச்சைக் கேட்டான். அது...

"ஒரு மொழியின் சிறப்பு என்பது அது எத்தனை ஆண்டு தொன்மை வாய்ந்தது என்பது மட்டும் கணக்கல்ல. அதன் மூலம் உருவான இலக்கிய நூல்கள் தான் அதன் பெருமைக்கு சான்று. அந்த வகையில் திருக்குறள் தமிழுக்கு கிரீடம்"

என்றபோது, மாணவர்கள் கைத்தட்ட வர்ஷினி மேலும் தொடர்ந்தாள்...

"கேரளாவில் ஒருவர் திருக்குறள் பற்றி அறிந்து, அதைப் படித்து வியந்தவர், வள்ளுவருக்கு கோயில்கட்டி இன்றுவரை பூஜை செய்கிறாராம். மாணவர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது, இங்கு வள்ளுவர் சிலைமுன், தினம் ஒரு திருக்குறள் எழுதப்படும். அதில் எந்தக் குறள் உங்களை ஈர்ப்படைய செய்கிறதோ அதை உங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்து தினமும் பாருங்கள், படியுங்கள். காலப்போக்கில், அந்தக் குறளில் உள்ளதே உங்கள் வாழ்விலும் நடக்கும் விந்தை அறிவீர்கள்"

பெரிய வகுப்பு மாணவர்கள் ஆச்சரியமாக விழி விரித்துப் பார்த்தனர் வர்ஷினியை. உடனே செய்துவிடும் ஆவல் தெரிந்தது அவர்கள் கண்களில். இன்னுமும் கொஞ்சம் பேசிமுடித்த வர்ஷினி தன் அறைக்குச் சென்றுவிட, கார்த்திக் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

"நீங்க சொன்னது நிஜமா?" என்று வர்ஷினியிடம் கேட்டுக்கொண்டு நின்றான் செந்தில். அவன்தான் இந்தப் பள்ளியின்,
"ஆல்இன்ஆல் அப்பா டக்கர்"

வர்ஷினியின் உதவியாளனும் கூட.

"வேணும்'னா நீயே செக் பண்ணிக்கோ"

"அப்போ நீங்க உங்க நோட்டுல எந்தக் குறள் எழுதி வச்சீங்க?"

வர்ஷினி சொன்னாள்..
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது"

செந்தில் விழித்தான்..

"எனக்குன்னு ஒரு குறள் கிடைக்காமயா போகும்? கண்டுபிடிக்கிறேன்"

என்றுவிட்டு அவன் நகர, வர்ஷினி சிரித்துக் கொண்டாள். குமரன் வயிற்றில் இருக்கும்போதே "எம்ஏ" முதலாண்டை முடித்தவள், அடுத்த ஆண்டில் பட்டம் பெற்றிருந்தாள்.

இந்தப் பள்ளிக்கூட நினைவுகளில், கார்த்திக்கிற்குத் தானாக கபிலன் நினைவு வந்தது. இவன் இப்படி மும்பைக்கு வர, கபிலனின் பிள்ளையும் ஒரு காரணம்.

கபிலனின் குடும்பத்தை செங்கல்பட்டு அனுப்பி வைத்தப்பின், கார்த்திக் மீது கோபமாக தான் இருந்தான் கபிலன். தானே பிழைத்து, தானே வாழ்ந்த கபிலனுக்கு, யாரோ ஒருவர் உழைப்பில் சோறுண்ண, ஒருசிறிதும் பிடிக்கவில்லை.

கார்த்திக்கின் கண்காணிப்பில் இருக்கிறோம் என்பதே, அதிக கோபத்தைத் தந்திருக்க, மீண்டும் சென்னைக்குத் திரும்பவும், அவன் விரும்பவில்லை. அவன் உணர்வை புரிந்துகொண்ட மீரா,

"நான் வேணும்'னா வேலைக்குப் போறேன் கபி" என்றாள்.

"வேணாம்"
என்றவன், எத்திராஜின் உதவியுடன் தன் சொத்துக்கள் சிலவற்றை இவ்வூருக்கு மாற்றிக் கொண்டான். அழகாக ஒரு வீடு, கூடவே, வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் விற்கப்படும், ஒரு பெரிய கடையும் அமைத்துக் கொண்டான். மனைவியை கல்லாவில் அமரவைத்து, இவன் ஓடியாடி வேலை செய்ய, சில மாதங்களில், உழைப்பு பிடிபட்டு விட்டது, வாழ்க்கை புரிபட்டது. மீராவோடும் கொஞ்சம் இணக்கமாக வாழத் தொடங்கினான்.

என்றபோதும், என் வாழ்க்கைப் பாதையை மாற்ற இவன் யார் என்ற கோபம் கார்த்திக் மீது இருக்கத்தான் இருந்தது அவனுக்கு. இந்நேரத்தில், பள்ளிக்குச் சென்ற கபிலனின் மகன் கடத்தப்பட்டான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. செய்வதறியாது கபிலனும், மீராவும் பதறி விழிக்க,

செய்தியறிந்து விரைந்து வந்தான் கார்த்திக். செங்கல்பட்டு போலீஸோடு இணைந்து தானும் தேடினான் பிள்ளையை. விடாத காவலர்களின் முயற்சியில் அடுத்தநாள் மதியம் பிள்ளை கிடைத்தது. எந்நிலையில், எப்படியென்று ஏன் சொல்வது...

"அங்கிள், அன்னைக்கு நீங்களும், இன்னொரு அங்கிளும் என்னோடு விளையாடினீங்க. ஆனா இவங்க அடிச்சாங்க"

என்றபோது கார்த்திக், பிள்ளையை அணைத்துக் கொண்டான். கொண்டு வந்து, மீராவிடம் ஒப்படைத்தவன்,

"கண்டுபிடிக்கலைனா, இவனும் இன்னொரு கபிலனா வளர்ந்திருப்பான்"

என்று சொன்னபோது, கபிலன் தலை குனிந்து விட்டான். கார்த்திக் மீதிருந்த கோபம் பஞ்சாகிப் பறந்துபோனது அவனுக்கு. திரும்பி சென்ற கார்த்திக்கை நன்றி புன்னகையுடன் பார்த்தான் கபிலன்.

சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு, தொடர்ந்தன அதே பணிகள்...

ஆம்! பேட்டை முனியம்மா போன்றோர் பிடிபட்டாலும், பிள்ளைக் கடத்தல் நின்று விடவில்லை. நாடெங்கும், பிறந்த குழந்தையிலிருந்து, வளர்ந்த பிள்ளை வரை கடத்தப்பட்டனர். பின்னர் அவர்கள், அடுத்த குரூப்புக்கு கைமாறி, அடுத்து சில மணி நேரங்களுக்குள் மாநில எல்லையைக் கடந்து சென்று, மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்பட, அந்த மெயின் கும்பல், பெரும்பாலும் மும்பை, கொல்கத்தா நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டிருந்தது.

இப்படிக் கடத்தப்பட்ட பிள்ளைகள் அவரவர் வயது, தோற்றத்துக்குத் தக்க வகையில், பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர்கள், உடலுறுப்பு திருட்டு, பாலியல், போதை மருந்து கடத்தல் போன்றவற்றிற்கு பயன் படுத்தப்பட்டனர். இப்படி பிள்ளைகளை பறி கொடுப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்க, இதுபற்றிய ஒரு அறிக்கை தயார் செய்து, மேலதிகாரியிடம் ஒப்படைத்தான் கார்த்திக். விளைவாக, அதைக் கண்டுபிடிக்க, பதவி உயர்வுடன் மும்பைக்கு மாற்றப்பட்டான்.

வர்ஷினி திகைத்தாள்.

பத்து மாதக் குமரனை இடது மார்பிலும், மற்றொரு பக்கம் வர்ஷினியையும் தாங்கி, சமாதானம் செய்திருந்தான் கார்த்திக். மூச்சு தேம்பி அழுதாள் அவன் மனைவி.

"கீத்து, நீ தான சொல்வ? நம்ம ரெண்டு பேரோடது, மாத சம்பளம் வாங்குற சாதாரண பணியில்ல. சமூகப் பணின்னு"

"ஆமா சொல்வேன். அதுக்காக, நீங்க எங்களை பிரிஞ்சி போவீங்களா?"

"நான் என்னோட கடமையை செய்யணுமே கீத்? பிள்ளைக் கடத்துறவன கண்டு பிடிச்சி, தப்பை தடுக்க வேணாமா, நீயே சொல்லு?"

"......"

"நீ வாடான்னு கூப்பிடு, அடுத்த மூணு மணி நேரத்தில உன் முன்னாடி நிப்பேன். ப்ராமிஸ்"

"நீ வாடா" என்றாள் அழுது கொண்டே.

மரியாதையற்ற ஒருமை வார்த்தை தான். ஆனால் அப்போதிருந்த மனநிலைக்கு இந்த முரட்டுப் பேச்சு தேவைப்பட, கார்த்திக் தன் மனைவி பிள்ளையை ஒருசேர அணைத்துக் கொண்டான்.

இப்படி வர்ஷினியை சமாளித்து விட்டவன், ரிஷியிடம் மாட்டிக் கொண்டான். வீட்டில் அனைவரும் இருக்க, ஏதோ ஊரில் ஷூட்டிங்கில் இருந்தவன், கோபத்துடன் வந்து நின்றான். எப்போதும்,

"கார்த்தி"
என்று குழைபவன் தான். இப்போது ஆத்திரத்தில் பேசினான்...

"என்னடா நினைச்சிட்டு இருக்க, கேட்க ஆள் இல்லைன்னா? வர்ஷிய ஏமாத்தின மாதிரி என்னை ஏமாத்த முடியாதுடா"

"ரிஷி"

"என்ன? இருபத்து அஞ்சு வருஷம் தனிமையில வாழ்ந்தது போதாதா உனக்கு? இன்னும் அந்த சொகுசு கேட்குதா?"

"என்ன'லாம் பேசுறடா ரௌடி?"

"அப்படி தான்டா பேசுவேன்"

"சொன்னா கேளு ரிஷி"

"உன்னை இனிமே தனியா விடறதா இல்ல கார்த்தி"

ரிஷியின் அருகில் சென்றான் கார்த்திக். அவன் முறைத்துக் கொண்டு நிற்க, அவன் முன்னுச்சி தலைமுடிக்குள் கைநுழைத்து இறுகப் பற்றினான். ரிஷி தட்டிவிட தான் நினைத்தான். ஆனால், அப்படி செய்துவிட மனமின்றி, நண்பனின் ஸ்பரிசத்தை அனுபவித்து நின்றான். கார்த்திக் சொன்னான்...

"நீ இருக்கும்போது எப்படிடா நான் தனியா இருக்கிறதா ஆகும்?"

உருகிப்போனான் ரிஷி..
"கார்த்தி"

"ஸ்கூல் படிக்கும்போதே என்னைத் தேடி வந்தவன் நீ. இப்ப வர மாட்டியா என்ன?"

"வருவேன் கார்த்தி"

என்றுவிட, அவன் முடிக்கற்றையை ஒரு ஆட்டுஆட்டி விட்டு நிமிர்ந்தான் கார்த்திக். சுற்றிலும் நந்தா, மங்கை, தினேஷ், சக்தி, வர்ஷினி நிற்பதைக் கண்டு சொன்னான்...

"எனக்கென்னடா இனி? உங்க ஆறு பேர் அன்பும் எனக்கிருக்கு. இப்போ குமரன் பிறந்துட்டான். அப்புறம் உன் பிள்ளைங்க, தினேஷ் பிள்ளைங்க. இனி நான் பெரிய குடும்பஸ்தன்டா. என் கடமையை முடிச்சிட்டு ஓடி வந்திருவேன்"

என்றுவிட்டுத் தன் கேப்பை மாட்டிக்கொண்டு அவன் கிளம்ப, அவன் பின்னால் எல்லாரும் சென்றனர். மங்கை மட்டும் அப்படியேத் தூணில் சாய்ந்து நின்று விட்டார். வெற்றியின் நினைவு வந்தது அவருக்கு... தன் மகனுக்குக் கொள்ளைப் பாசம் வேண்டும் என்று கேட்டானே வெற்றி? அது இப்போது கார்த்திக்கிற்குக் கிட்டி விட்டது, ஒரு தந்தையின் வாக்கும் ஜெயித்து விட்டது. மங்கையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

மகன் செய்யப்போகும் பணி வெற்றியடைய வேண்டும் என்று வெற்றியிடம் வேண்டிக் கொண்டார் மங்கை.
~~~
 
உலகின் அதிக அளவு மக்கள் தொகை உள்ள நகரமான மும்பை சென்றடைந்த கார்த்திக், முதல் நாளே தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். பிள்ளை பிடிக்கும் கும்பலை அறவே அழிப்பது என்பது அவனின் இரகசியப் பணி. ஆனால் மற்ற மும்பைக் காவலர்கள் அறிந்தது.. தமிழ்நாட்டு அதிகாரி ஒருவர் மாற்றலாகி இங்கு வந்திருக்கிறார் என்பது மட்டுமே.

மராத்தி மொழியை சரளமாக பேசும் கார்த்திக், எளிதில் அவர்களோடு கலந்து விட்டான். முதலில் அவன் செய்தது, பேருந்து மற்றும் ரயில் நிலையம், எல்லாவற்றிலும் கண்காணிப்பை அதிகப் படுத்தியது. சந்தேகப்படும் வகையில் குழந்தைகளை யார் வைத்திருந்தாலும் விசாரிக்கப் பட்டனர். அத்தனை பெரிய நகரத்தில் அது அவ்வளவு சாத்தியமில்லை என்றாலும், கொக்குக்கு மீன் ஒன்றே மதி என்று ஒற்றைக் காலில் நின்றால், சாதித்து விடலாம் தானே?

முதலில் கூலிக்கு பிள்ளைக் கடத்தும் கும்பலை காலி செய்தான். அடுத்து, அதற்கு மேலிட கும்பல். ஒவ்வொன்றும் மாதக் கணக்காக, வருடமாக எடுத்துக் கொண்ட பணிகள் தான். நிதானமாக செய்தான் கார்த்திக். கடைசியில் மெயின் கும்பலின் தலைவனை நெருங்கத் திட்டமிட்டான்.

இடையில் கிடைத்த நேரத்தில், ஊருக்கும் சென்று வந்தான். கால்பரிட்சை, அரைப்பரிட்சை விடுமுறைக்கு வர்ஷினி குமரனுடன் வந்து தங்கினாள். தினேஷ், ரிஷி வந்து சென்றார்கள். சந்தோஷத்திற்கு குறைவில்லை. எனினும் தன் பணியில் கவனமாக இருந்தான் கார்த்திக்.
~~

அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல்மாடி...

"சோளிக்கே பீச்சே கியா ஹே" என்ற பாடலுக்கு இளம் பெண்கள் இருவர் ஆடிக் கொண்டிருக்க, பீடா போட்டு நிறம் மங்கியப் பற்கள், கரடு முரடான முகம் கொண்ட பீம்தேவ், ஆட்டத்தை அரைகுறை மனநிலையில் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் கூட்டத்தால் கடத்தப்பட்ட சின்னப் பிள்ளைகள், ஒரு ஓரத்தில், வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். நடுங்கிக் கொண்டிருந்த அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டு பீம்தேவின் முகம் கோணியது. பல மாதங்களாக இப்படித்தான் நிகழ்கிறது. யார் தன்னை இப்படி நெருக்குவது என்று பீமால் கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசில் பிடிபட்ட அவனுடைய ஆட்கள் அனைவரும் கார்த்திக்கால் இரகசியமாக வைக்கப்பட்டிருக்க, விவரங்கள் எதையும் கண்டறிய முடியவில்லை. இதோ இப்போது கத்தினான்..

"யார் அந்த அதிகாரின்னு தெரிஞ்சிதாடா?"

அவனின் அடியாள் கீழே எட்டிப் பார்த்தவாறு சொன்னான்...

"இப்பதாங்கத் தெரியுது. பார்த்தா தமிழ்நாட்டுக்காரர் மாதிரி இருக்கு"

"ஓ, மதராஸியா, இருந்தா ஒரேடியா நேர்மையா இருப்பாங்களே? இப்ப எங்கடா அந்த அதிகாரி?"

"இங்க தாங்க"

"இங்கயா, எங்கடா?"

"கீழதாங்க"

சட்டென்று எழுந்த பீம் தேவ் மாடியிலிருந்து கீழே எட்டிப்பார்க்க, வெள்ளை சட்டை, காக்கிபேண்ட் அணிந்த கார்த்திக் ஜீப்பின் முன் நின்று சுற்றிலும் போலீஸ் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். திரும்பித் தன் அடியாளை ஓங்கி ஒரு அறைவிட்டான் பீம். ஆடிக் கொண்டிருந்தப் பெண்கள் அஞ்சி அங்கிருந்து ஓடிவிட,

"இந்தப் பசங்களை ஒண்ணா சேர்த்துக் கட்டுங்கடா"

என்றான் பீம்தேவ்.

கார்த்திக் அங்கு வந்தபோது, பிள்ளைகள் ஒன்றாக ஒரு பெரியக் கயிற்றில் கட்டப்பட்டு, மேல் மாடியிலிருந்து கீழே தொங்க விடப்பட்டிருந்தனர். கயிற்றின் முனை பீம்தேவ் கையில். பிள்ளைகளின் ஓலம் காதைக் கிழிக்க, பீம் ஹிந்தியில் சொன்னான்...

"கிட்ட வந்த, இந்தப் பசங்களை அப்படியேக் கீழ போட்ருவேன்"

கார்த்திக் அமைதியாக நின்றுவிட, பீம் கயிற்றைப் பிடித்துக் கொண்டே, கார்த்திக்கைத் தாக்க முயன்றான். அதற்கும், ஒருநொடி தான்... கார்த்திக்கின் கால் நீண்டு அவனை எட்டி மிதிக்க, அவன் தள்ளாடினான்.

கோபத்தில் அந்தக் கயிற்றை அவன் நழுவவிட, பாய்ந்து பிடித்துக் கொண்டான் கார்த்திக். இப்போது மற்ற போலீஸ்கள் அந்த கயிற்றை வாங்கி பிள்ளைகளை மேலேத் தூக்க... அடுத்து அங்கு ஒரு அதிரடி சண்டைக் காட்சி நிகழ்ந்தது. இறுதி முடிவாக பீம்தேவையும், அவன் ஆட்களையும் அதேக் கயிற்றில் கட்டி வீதியில் இழுத்துச் சென்றான் கார்த்திக். வழி நெடுக நின்ற மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் நிறுத்தப்பட, நீதிபதி அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியதோடு, கார்த்திக்கை வெகுவாகப் பாராட்டி, அவனின் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்தார்.

பின்னர் கொல்கத்தாவுக்கும் சிறப்பு போலீசாக சென்று, அங்கும் உதவிவிட்டு வந்தான். அடுத்தடுத்த அவனின் பணிகள், மூன்று ஆண்டுகள் மும்பையில் தொடர, இதோ மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டவன், வீட்டிற்கு வரும் நாளை யாருக்கும் சொல்லாமல் இரகசியமாக வைத்திருந்தான் கார்த்திக்.

இங்கே அவன் வீட்டில்,

"மம்மா, குமரன் குளிச்சி புதுசு ச்சட்டை போட்டு வன்ட்டேன்"

என்ற குரல் கேட்க, சமையலறையில் நந்தகுமாருக்கு காஃபி போட்டுக் கொண்டிருந்த மங்கை அதை அப்படியே வைத்துவிட்டு, வெளியே வந்தார். மேல் படிக்கெட்டில் புன்னகையுடன் நின்றிருந்தான் குமரன்.

"வாடா செல்லம்"
என்றவர் மேலே ஏறப்போக,

"ணேணாம், ணேணாம். நீங்க இருங்க. நானே வரேன்"

என்று விட்டு, படிக்கெட்டின் கம்பியைப் பிடித்து,

"அ,ஆ,இ,ஈ"
என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு படிக்கெட்டாக இறங்கியவன், கடைசியாக "ஃ'ண்ணா"

என்றபடி, மங்கையின் காலைக் கட்டிக்கொண்டான். அள்ளி எடுத்துக் கொண்டார் பேரனை.

அவனை, இடுப்பில் வைத்துக் கொண்டு மீண்டும் சமையலறை சென்றவர்,

"தம்பிக்கு, பால் வேணுமா, சத்துமாவு கஞ்சி வேணுமா?" என்றார்.

உடனே சொன்னான்..
"நந்துப்பா என்ன குடிக்றாங்களோ அது தாங்க"

மங்கை சிரித்தார்.
"இன்னைக்காவது அவரைக் காஃபி குடிக்க விடுடா"

விரலால் கன்னம் தட்டி யோசித்தது பிள்ளை.

"அப்ப சரி, அவங்கள்க்கு காஃபி, எனக்குப் பால்"

என்றவன், மங்கையிடமிருந்து இறங்கி, நந்தாவைத் தேடி ஓடினான். கட்டிலில் கண்மூடி சாய்ந்திருந்தார் அவர்.

பிஞ்சுப் பாதங்களை, இன்னும் பிஞ்சாக வைத்து, நடந்து சென்று வலது முட்டிக்காலைக் கட்டில் முனையில் வைத்து எக்கி ஏறியவன், நந்தாவின் வயிற்றில் அமர்ந்து, அவர் மீது சாய்ந்து விட்டான். ஈர ரோஜாக்கள் படர்ந்தது போல் உணர்ந்தார் நந்தா. கேட்டார்..

"அடடே! யார் வந்திருக்கிறது?"

"உங்க கார்த்தி வந்துக்கேன்"

அவன் முதுகு முழுக்கத் தடவியவர்,

"கார்த்தி மாதிரி தெரியலையே"
என்றார்.

"ஹான், உங்க கார்த்தி தான்"

"இல்லையே, கமகமன்னு வாசனை வருதே"

"ஹ்ம்ம், ஆமா. அம்மா பவுடர் போட்டு விட்டாங்க"

என்று விட்டது பிள்ளை.

நந்தா வாய்விட்டுச் சிரித்தார். அதற்கு மேல் பிள்ளையைப் பார்க்காதிருக்க முடியாமல், இரு தோள்களைப் பிடித்து நிமிர்த்தி, வயிற்றில் அமர்த்திக் குமரனைப் பார்த்தார்.

சிறுவயது கார்த்திக்கின் தோற்றம். வெற்றியை நினைவு படுத்தும் கழுத்துவிலா மச்சம். கூடுதல் சிறப்பாக வர்ஷினியின் கன்னக்குழி.

அன்புடன் கேட்டார்..
"பால் குடிச்சியா?"

"மம்மா கொண்டு வராங்க"

மங்கையும் கொண்டு வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றிக் கொடுக்க, சொட்டு விடாமல் குடித்தது பிள்ளை. ரசித்துப் பார்த்த நந்தா சொன்னார்..

"பிள்ளைக்கு ரொம்ப பசி போல. போ'மா சீக்கிரம் டிஃபன் செய்"

"சரிங்க"
என்று மங்கை சென்றுவிட,

"குமரன் இப்ப ரெடி, தூக்குங்க நந்துப்பா"

என்று கையிரண்டையும் உயர்த்தினான் குமரன். செயல் சிறுவயது கார்த்திக்கை நினைவு படுத்த, தூக்கி அணைத்துக் கொண்டார் நந்தகுமார். தினமும் நடக்கும் நிகழ்வு தான். ஆனால் தான் என்ன? ஒவ்வொரு நாளும் புதுப்புது சந்தோஷம் தருகிறது.

அவனைத் தூக்கிக்கொண்டு வெற்றியின் புகைப்படம் அருகே சென்றவர், சொன்னார்...

"வெற்றி, உனக்குரியது எல்லாமே நான் அனுபவிக்கிறேன் டா. இந்தப் பேரன் சந்தோஷத்தை நீ அனுபவிக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு வெற்றி"

என்று சொல்லி அவர் வேதனைப்பட, குமரன் என்ன நினைத்தானோ, நந்தாவிடமிருந்து எக்கி வெற்றியின் கன்னத்தில் முத்தமிட்டான். பால் குடித்த ஈர உதடுகள், வெற்றியின் கன்னத்தில் அச்சாகப் பதிய, அது உடனே காற்று பட்டு உலர்ந்துவிடும் தானே? இல்லை உலரவில்லை. அப்படியே ஈரமாகவே நிலைக்க நந்தா திகைத்தார். நம்மை மீறிய சில சக்திகள் உண்டென்பது உண்மை என உணரும் தருணங்கள்..

"வெற்றி"
என்றபடி குமரனை நழுவ விட்டார். நின்று, சிலநிமிடங்கள் நண்பர்கள் இருவரையும் தலையை உயர்த்திப் பார்த்த குமரன், அறையை விட்டு வெளியே வந்து விட்டான். மீண்டும்,

"க்,ங்,ச்,ஞ்"
என்றபடி மாடி ஏறினான்.

அறையில் வர்ஷினி கண்ணாடி முன் நின்றிருந்தாள். அவளின் துப்பட்டா முனையைப் பிடித்து இழுத்தான் குமரன்.

"ஆவ், கார்த்தி'பா"

என்று திரும்பியவள், குமரனைக் கண்டு செல்லமாக முறைத்தாள். கன்னம் குழிவிழப் பிள்ளை சிரிக்க, அதில் மயங்கியவள், அவனைத் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் சரிந்தாள். கேட்டாள்..

"எங்க போய்ட்டு வர குட்டி'மா?"

"மம்மாட்ட போனேன்"

"அப்புறம்?"

"நந்துப்பாட்ட போனேன்"

"அப்புறம்?"

"வெற்றிப்பா பாத்தேன்"

"அப்புறம்?"

"அம்மாட்ட வந்துட்டேன்"

முத்தமிட்டுப் பிள்ளையை பக்கத்தில் படுக்க வைத்தாள்.

"ம்மா கத சொல்லுங்க"

"என்ன கதை?"

"கெலீனா கத"

ஆடு, முயல், நரி கதைகள் எத்தனை சொன்னாலும் அவனுக்கு இந்தக் கதை தான் பிடிக்கும். சொன்னாள்...

"கெலீனாவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்....ப நீள முடி. அதோட நுனியை அவ பார்த்ததே இல்லையாம். இப்ப அவளுக்கு விளையாடத் தோணுச்சாம். அவளோட பின்னலைத் தூக்கி வானத்தில வீசினாளாம் கெலீனா. அது அலை அலையா காத்துல மிதந்து வானத்துக்குப் போச்சாம். அவளும் வானத்தில பறக்க ஆரம்பிச்சாளாம்"

பிள்ளை "ம்ம்ம்" கொட்டியது.

"ஹோ... ய்யே, என்னோட வானம், என்று கத்திக்கொண்டே பறந்தாள் கெலீனா. அவ கூந்தல்ல பட்டாம்பூச்சி, பறவை எல்லாம் வந்து பொதிஞ்சிகிச்சாம். அவளுக்கு தாகம் எடுத்தப்போ மேகத்தைக் கிள்ளி வாயில போட்டுக் கிட்டா. கால் வலிச்சப்போ நட்சத்திரத்தில ஏறி உட்கார்ந்துகிட்டா. அவ பின்னல் கீழ வரை தொங்குச்சாம். யாரு'லாம் வானம் பார்க்க ஆசைப்பட்டாங்களோ, அவங்க'லாம் அதைப் பிடிச்சி மேல ஏறி வந்தாங்க. அப்போ திடீர்னு ஜோ'னு மழை கொட்ட ஆரம்பிச்சிதாம். கெலீனாவோடா கூந்தல் நனஞ்சி போச்சாம். கெலீனா கீழ கீழ விழப் போனாளாம்" என்றபடி குமரனைப் பார்க்க, அரைத் தூக்கத்தில் "ம்ம்ம்" கொட்டிக் கொண்டிருந்தான்.

கதையை நிறுத்திவிட்டு, அவன் தலைமுடியை வர்ஷினி கோதிவிட பிள்ளை திரும்பி அவள் மீது காலைப் போட்டுக் கொண்டது. எழுந்துகொள்ள மனமில்லாமல் வர்ஷினியும் சுகமாக கண்களை மூடிக் கொண்டாள். அடுத்த இரண்டு நாளில்,

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தான் கார்த்திக். முப்பத்து நான்கு வயது. மெல்லிய தேகம் கொஞ்சம் சதைப் பிடித்திருந்தது. மீசையைக் கொஞ்சம் முறுக்கி விட்டிருந்தான். அப்போது முத்து வேகமாக வந்து அவன் கையிலிருந்த பேகை வாங்கிக் கொள்ள, கார்த்திக் நின்றுவிட்டான். பஷரும் அருகே வந்து சல்யூட் அடித்து நிற்க,

"என்ன பஷர் இது?"

"சென்னையின் புது ஏசிபிக்கு எங்களின் வரவேற்பு சார்"

என்றவன், திரும்பிக் கைகாட்டினான். வரிசையாக ஜீப்கள் நிற்க காவலர்கள் சல்யூட் அடித்து நின்றிருந்தனர். கார்த்திக் தலையை இடமும், வலமும் ஆட்டிக்கொண்டவன் நடக்க ஆரம்பித்தான். கூடவே நடந்தான் பஷர். கார்த்திக் கேட்டான்..
 
"பஷர், நான் வரது உங்களுக்கு தெரிஞ்சிருக்கு'னா கண்டிப்பா ரிஷிக்கும், தினேஷுக்கும் தெரிஞ்சிருக்கணுமே"

"ஆமா கார்த்தி"

"ஆமா அண்ணா"

என்றபடி, முகமூடியுடன் முன்னே வந்து நின்றனர் இருவரும். கார்த்திக் மகிழ்ச்சியாக சிரித்தான். பஷரைப் போலவே தினேஷும் சல்யூட் அடித்து சிலையாக நிற்க, தம்பியின் வயிற்றில் செல்லமாகக் குத்தினான் கார்த்திக்.

நண்பனை அணைத்துக் கொண்ட ரிஷி சொன்னான்..
"கார்த்தி, உன்னை நினைச்சா பெருமையா இருக்கு"

"பெருமைப் பட என்ன இருக்கு ரிஷி? நாட்ல இவ்ளோ அவலங்கள் நடக்குதுன்னு நாம சிறுமை தான் படணும்"

என்றவனைப் புன்னகையுடன் பார்த்தான் ரிஷி.

"அதுசரி... இன்னும் யாரெல்லாம்டா வந்துருக்கீங்க?"

கார்த்திக் கண்களில் அதீத எதிர்பார்ப்பு தெரிய, ரிஷியும், தினேஷும் குனிந்து பார்த்தனர். அவர்களின் கால்களுக்கிடையே நின்றிருந்தான் குமரன்.

கார்த்திக்கும் குமரனைப் பார்த்துவிட, பிள்ளை தந்தையின் கால்களுக்குத் தாவியது. வலதுகால் ஷூவில் ஏறி நின்ற மகனை, காலை உயரத் தூக்கி கேட்ச் போட்டு கையில் பிடித்துக் கொண்டான் கார்த்திக்.

பிள்ளை கொஞ்சியது..
"ப்பா"

"சொல்றா"

"ப்பா"

"சொல்றா"

"ப்பா"

மகனின் கழுத்து வளைவில் பல்படாது உதடுகளை மடக்கிக் கடித்தான். அது குமரனை கூசச் செய்து,

"ப்பா, ப்பா, ப்பா"
என்று பிள்ளை அரற்ற, மீண்டும் மீண்டும் கடித்தான் கார்த்திக். ரிஷியும், தினேஷும் ரசித்து நிற்க, கேட்டான்..

"அப்போ நான் வரது எல்லாருக்கும் தெரியுமா?"

"இல்லப்பா, அம்மாக்குத் தெரியாது. நான் நைட்டே சித்தப்பா கூடப் படுத்துட்டு நைஸா இங்க வந்துட்டேன்"

வர்ஷினியை நினைத்துக் கொண்டு,
"ஆஹான்"
என்றான் கார்த்திக்.

ரிஷி அங்கேயே விடைபெற்றுக் கொள்ள மூவரும் வீடு வந்தனர். மூவரையும் சேர்த்து ஆரத்தி எடுத்தார் மங்கை. கார்த்திக் மீது எகிறிய டைகரை மகனோடு சேர்ந்துக் கொஞ்சிவிட்டு, நந்தகுமார், மங்கையோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டுத் தன் அறைக்கு வந்தான் கார்த்திக். வர்ஷினி எங்கோ கிளம்பிக் கொண்டிருக்க, அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தான்.

"ஆவ், குட்டி'மா"

என்று திரும்பியவள் கார்த்திக்கைப் பார்த்து மலர்ந்தாள்.

"நீங்களா?"

"நீங்களே தான்"

"அதானா? காலையிலையிருந்துக் காரணமே இல்லாம சந்தோஷமா இருந்துச்சி கார்த்தி'பா. இதோ நீங்க வந்துட்டீங்க"

"பாருடா, இவ அறிவை"

என்றவன் மனைவியின் தோளில் மூக்கை வைத்து தேய்த்தான்.

"அதென்னடி அம்மா, பையன் ரெண்டு பேர் மேலயும் ஒரே மாதிரி வாசனை?"

"ஒரே பவுடர் ஒரே வாசனை"

என்று சிரித்தாள் வர்ஷினி. குழிந்த அவள் கன்னக் குழியில் கட்டைவிரலை வைத்து அவன் தேய்க்க, வர்ஷினி கேட்டாள்..

"எத்தனை நாள் இருப்பீங்க, எப்ப கிளம்புவீங்க?"

"ஆயுசு முழுக்க இருப்பேன். உன்னோடு தான் கிளம்புவேன்"

வர்ஷினியின் கண்கள் விரிந்தன. சொன்ன சொல் பெண்மகளின் கொடுப்பினை அல்லவா? அவள் கண்களில் நீர் திரையிட்டது. அதைக் கண்டுவிட்டு சொன்னான்..

"இந்தக் கண்ணீர் மட்டும் கீழ விழுந்துச்சின்னா என்னை ஏன்டா'னு கேளு"

வர்ஷினி வேணுமென்றே கண்களை சிமிட்ட, அக்கண்ணீர் துளிகள் கண்களை விட்டு வெளியே சிந்துமுன் நாக்கால் அணையிட்ட கார்த்திக், அதை சுவையுணர்ந்து சொன்னான்...

"அட என்ன இது, உன் கண்ணுலயும் தமிழை தான் தேக்கி வச்சிருக்கியா, உன் கண்ணீர் தேனா தித்திக்குது?"

வர்ஷினி சிரிக்க அந்த அழகில் மயங்கியவன், அவள் இடை வளைவில் கைவைத்து இதழ்களை நெருங்கினான்.

"கார்த்தி'பா"
என்று கிறங்கி, கண்களை மூடிக் கொண்டாள் வர்ஷினி. அப்போது,

"அம்மா, குமரன் வந்துட்டேன்"

என்ற குரல் கேட்க, இருவரும் விலகினர். குமரன் அறைக்குள் வர, வர்ஷினி கேட்டாள்...

"எங்க குட்டி'மா போயிருந்த இவ்ளோ நேரம்?"

பிள்ளை தகப்பனைப் பார்க்க, தகப்பன் பிள்ளையைப் பார்த்தான்.

"பதில் சொல்லு"

"சித்தப்பா, மாமா கூட அப்பாவ கூப்பிட போனேன்"

"ஓஹோ, எல்லாரும் கூட்டுக் களவாணிகளா? உன்ன"

என்றவள், முந்தானையை இழுத்து சொருகி குமரனை விரட்ட, அவன்,

"ப்பா"
என்று கத்திக்கொண்டு ஓடினான். கார்த்திக் மகனைக் காப்பாற்றித் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டான். வர்ஷினி குதித்து குதித்து மகனைத் தொட முயல, அவளால் முடியவில்லை. விட்டுவிட்டு கட்டிலில் போய் உம்மென்று அமர்ந்து கொண்டாள்.

கார்த்திக்கும், குமரனும் அவள் அருகில் வந்து அமர்ந்தனர். வர்ஷினி முறைப்புடன் எழுந்து நடக்க, அவளை இழுத்துத் தன் மடி மீது அமர்த்திக் கொண்டான் கார்த்திக்.

பார்த்துக் கொண்டிருந்த குமரன் வர்ஷினி மீது ஏறி அவள் மார்பில் சாய்ந்து கொள்ள, இருவரையும் சேர்த்துப் பிடித்துக் கொண்ட கார்த்திக், ஊஞ்சல் போல ஆட்டினான் உடலை.

கார்த்திக், இவர்களோடு இல்லாத நாட்களில் வர்ஷினி இப்படி குமரனை அணைத்துப் பிடித்து, சாய்ந்தாடுவது வழக்கம். அப்போது சொல்லிக் கொடுத்த பாடலை குமரன் பாடினான்...

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
தித்திக்கும் தேனே சாய்ந்தாடு
தெவிட்டாத தமிழே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு"

தாயும், தகப்பனும் பிள்ளையின் குரலில் சொக்கிப் போயினர். கொஞ்ச நேரத்தில் கார்த்திக் கேட்டான்..

"ஆமா நான் வரும்போது எங்கேயோக் கிளம்பிட்டு இருந்தியே கீத்து?"

"இன்னைக்கு எல்லாருக்கும் லீவ். அதான் சக்தி பிள்ளைங்களை பார்க்கலாம்'னு"

"போகலாம்"
என்றவன், மனைவி பிள்ளையை பல்சரில் கூட்டிச் சென்றான். ஏக வரவேற்பு அங்கே.
"வாடா என் செல்லம்"
என்று குமரனை அணைத்துக் கொண்டார் ஆனந்தன்.

"டேட், என் மருமகனுக்கு மரியாதை கொடுங்க" என்றான் ரிஷி.

"உனக்கு மருமகனா இருக்கலாம். ஆனா, எனக்கு இவன் மூத்தப் பேரன்" என்றார் ஆனந்தன்.

இப்படி ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க, குமரனின் கவனம் ஆதித், அதிதி மேல் இருந்தது. ஆறுமாதக் குழந்தைகளான இருவரும் பெரிய வட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர். பேசும் சத்தங்கள் கேட்டு, அதிதி தவழ்ந்து வர முற்பட்டு இருக்கையின் முனைக்கு வர,

"ஏ! கெலீனா கீழ விழ்ந்துடாத"

என்று ஓடினான் குமரன். அப்படி அவன் சொன்னதில் அனைவரும் ஆச்சரியமாக பார்க்க, வர்ஷினி சிரித்தாள். அதைக் கண்டுவிட்டு கார்த்திக் சொன்னான்..

"இவ தான் ஏதோ கதை சொல்லி வச்சிருக்கா சக்தி"

"என்ன வர்ஷி?"
என்றாள் சக்தி.

ரிஷி இடை புகுந்தான்.

"உன் அண்ணன் பையன் உன்னை மாதிரி தான இருப்பான்? என்னை நீ ரிஷி'னா கூப்பிடுற?"

"போ சிபு"
என்றாள் சக்தி.

எது எப்படியோ குமரனுக்குப் பிடித்த கெலீனா தேவதை, இந்த அதிதி தான். அடுத்து, குமரன் ஆதித் அருகில் சென்று சொடக்கிட்டான். அந்தப் பிஞ்சு விரல்களில் பெரிதாக சத்தம் ஒன்றும் வரவில்லை. என்றாலும், குனிந்து விளையாடிக் கொண்டிருந்த ஆதித் நிமிர்ந்து பார்த்தான். அவன் மீண்டும் சொடக்கிட, ஆதித் குமரனின் கையை, தன் இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

"ஹாஹா... ஆதி"
என்று சிரித்த குமரன், அந்த இருக்கையில் ஏறி சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள, சக்தி இரு பிள்ளைகளையும் தூக்கி அவன் மடியில் வைத்தாள். பாந்தமாக அமர்ந்து கொண்டனர் இருவரும். அணைத்துக் கொண்டான் குமரனும்.

அன்றிரவு தங்களின் அறையில், குமரனைத் தோளில் போட்டு, தாலாட்டுப் பாடித் தூங்க வைத்து, அவனுடைய சின்னக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு வர்ஷினியிடம் வந்தான் கார்த்திக். அவள் சிரிக்க,

"என்ன சிரிக்கிற?"

"நீங்க தாலாட்டுப் பாடினா குட்டிப் பையனுக்கு தான் தூக்கம் வருது. எனக்கு வரல"

"அப்போ பின்ன?"

"உங்க மேல காதல் தான் வருது கார்த்தி'பா"

"ஆஹான்?"
என்றவன்,
"காதல் வந்தா என்ன செய்யலாம் சொல்லு?" என்றான்.

"என்ன செய்யணும்? நீங்க சொல்லுங்க"

"உன் பாரதி எதாச்சும் சொல்லியிருப்பாரே, அதை சொல்லு"

சொன்னாள்...
"காதலினால் கலவியுண்டாம். கவலை தீரும், கவிதை உண்டாம், மரணம் பொய்யாம், ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே"

கார்த்திக் கேட்டான்...
"ஏதலினால்?"

"காதலினால் கார்த்தி'பா" என்க, தன் காதலை செய்ய ஆரம்பித்தான். முத்தமிட்டு முத்தமிட்டு அவளின் கழுத்துக்கு வந்தபோது, இருவருக்கும் காதல் மிகுந்து காமம் வந்தது.. காதலினால் கலவியுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.
~~

அடுத்த நாள்,

மூத்த அதிகாரிகள் முன் அவன் தன் புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது, "கார்த்திகேயன் வெற்றிச் செல்வன்"
என்று அழைக்கப்பட்ட, அந்த ஒரு நொடியில் நந்தாவின் கண்களில் சின்ன ஏக்கம் வந்து போனதைக் கார்த்திக் கண்டு கொண்டான். விளைவாக,

அன்றிரவு சாப்பிடுகையில்,

"அப்பா, நீங்களும், அம்மாவும் ஒரு நல்லநாள் பார்த்து எத்திராஜ் வீட்டுக்குப் போய் தினேஷுக்குப் பொண்ணு கேளுங்கப்பா" என்றான்.

அவன் சொன்ன விஷயத்தை விட, அப்பா என்று அழைத்ததில், முதலில் திகைத்துப் பின் காரணம் புரிந்த நந்தா,
"சரி கார்த்தி"
என்றார் மனநிறைவுடன்.

"என்ன'ண்ணா உன் அப்பா சென்டிமெண்ட் தீரவே தீராது போலயே"

என்று காதில் பேசிய தம்பியின் கால்களை மேஜைக்கு அடியில் செல்லமாகத் தட்டி விட்டான். சொன்னதுபோல், நந்தகுமார், மங்கை, ஆனந்தன், மிருதுளா நால்வரும் சென்று பெண் கேட்க, எத்திராஜ் என்ன மறுக்கவா போகிறார்? உடனே பேசி முடித்தனர்.

இதோ திருமணநாள்...

"கல்யாணமாம் கல்யாணம் சித்தப்பாக்கும், சித்திக்கும் கல்யாணம்"

வர்ஷினி சொல்லிக் கொடுத்தபடி, ராகத்துடன் பாடி காலையில் தினேஷை எழுப்பினான் குமரன்.

"அடேய் குமரா, எனக்கே பாட்டா?"

என்று அண்ணன் மகனை இழுத்துக் கட்டிக் கொண்டான் தினேஷ். ரிஷிகார்த்திக் திருமண மாளிகை தான் இவனுக்கும். பரிவட்டம் கட்டிய ஸ்டைலில் அவன் உடை அணிந்திருக்க, பிரியா பட்டில் மின்னினாள். பொன்னான நேரத்தில் பொன் தாலியை அணிந்தான் தினேஷ்.

வர்ஷினி, சக்தி, நிஷா மூவரும் ஒன்றுபோல், உடை உடுத்தி வலம் வந்தனர். குட்டிப்பிள்ளைகள் அவரவர் கணவர்களிடத்தில். கேப்டன் மொஹிந்தர் மனைவி மகளுடன் வந்திருந்தான். மொத்த இந்திய அணியும் வந்திருக்க, பிரேமின் தம்பி சுரேந்தர் கண் கொட்டாமல் பார்த்து ரசித்தான்.

"அடுத்த கல்யாணம் உனக்கு தான்டா" என்று கிண்டல் செய்தனர் வீட்டினர். இந்திய அணியினரைக் கைக்காட்டி,

"இவங்க'லாம் என் கல்யாணத்துக்கு வருவாங்கன்னா இப்பவே நான் ரெடி"
என்றான் சுரேந்தர்.

தினேஷுக்கு சிகிச்சை செய்த மருத்துவர் பார்த்திபனும், தேவியும் வந்திருக்க, தினேஷ் தேவியைப் பாரத்து ஸ்பெஷலாக சிரித்தான். தேவி வாய்விட்டு சிரிக்க, பார்த்திபன் அவளைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டு,
"இவள் என் தேவி"
என்றான்.

தினேஷை, பிரியா முறைத்தாளோ இல்லையோ நிஷா முறைக்க, வர்ஷினியும், சக்தியும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தனர்.
 
அன்றிரவு, அவர்களின் முதலிரவைக் கொண்டாட விட்டுவிட்டு, ரிஷிகார்த்திக் குடும்பம் கடற்கரை வீடு வந்தது. நீலனின் மீது மூன்று பிள்ளைகளையும் அமர்த்தி கடற்கரையை சுற்றி வந்தான் ரிஷி. வீடு வந்தபின், ஆதித்தை வாங்கி, மடியில் வைத்து அவனின் சுருண்ட முடியைக் கோதி விட்டான் கார்த்திக். குமரன் அருகில் வந்து சொன்னான்..

"ப்பா, இப்டி செஞ்சா ஆதிக்கு ரொம்ப பிடிக்கும்"

"ஓஹோ"
என்றவன், சொடக்கிட்டு ஆதித்தை அழைக்க,

"ப்பா, ப்பா, இப்டி செஞ்சா அவனுக்குக் கோவம் வரும்"

சொன்னதுபோல் ஆதித், கார்த்திக்கின் கையைத் தள்ளிவிட,

"இப்ப பாருங்க நான் செய்றேன்"
என்றுவிட்டு குமரன் சொடக்கிட, ஆதித் அவன் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். குமரன் சொன்னான்...

"நான் செஞ்சா எதூ...ம் சொல்ல மாட்டான்"

கார்த்திக் திகைப்புடன் ரிஷியைப் பார்க்க அவன் சிரித்தான். ரிஷியின் மடியிலிருந்த அதிதியும் முளைத்த இரண்டு பற்களோடு சிரித்துக் காட்டினாள்.

பின்னர், பிள்ளைகளை உறங்க வைக்க, வர்ஷினியும், சக்தியும் உள்ளே சென்றுவிட, நண்பர்கள் இருவரும் தனிமையில்...

ரிஷியின் கண்களில் அன்பு ததும்பி வழிந்தது. சொன்னான்...

"சினிமால எத்தனையோ பெண்களை லவ் பண்றேன் கார்த்தி. ஆனா உண்மையான காதல்'னா அது என் சகி மட்டும் தான்"

கார்த்திக் அவனைப் பெருமையுடன் பார்க்க,

"அதே சினி ஃபீல்ட்ல எத்தனையோ பேர்
நண்பன்னு சொல்லி என் தோள்'ல கைபோடுறாங்க. ஆனா நண்பன்'னா எனக்கு நீ மட்டும் தான் கார்த்தி"

கார்த்திக்கின் இதயம் ரிஷியின் அன்பில் தவித்து வேகமாகத் துடித்தது. சொன்னான்...

"நந்துப்பாவ கூட அப்பான்னு கூப்பிட்டப் பிறகு மனசு நிறைவாகிருச்சி ரிஷி. ஆனா உனக்கு மட்டும் ஏதோ குறை வச்சா மாதிரியே இருக்குடா"

ரிஷி அமைதியாகப் பார்த்திருக்க,

"இது இந்த ஜென்மத்தில தீராதுன்னு நினைக்கிறேன் ரிஷி. நீ என்னைத் தேடி வந்த மாதிரி, அடுத்தப் பிறவியில உன்ன நானே தேடி வருவேன்டா"

அன்புடன் சொன்னான் ரிஷி..
"வா கார்த்தி. நான் காத்திருப்பேன்"

அப்போது அங்கு வந்தனர் வர்ஷினியும், சக்தியும். வர்ஷினி ரிஷியைப் பார்த்துக்க கொண்டே சொன்னாள்...

"நட்பு என்பது ஒரு வரம். அதில் கரைந்துவிட யார் சித்தமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கே அது வாய்க்கிறது"

அவளைப் பார்த்து அன்புடன் சிரித்த ரிஷி, அவளின் கைபிடித்து இழுத்து அருகில் அமர்த்திக் கொள்ள, தன் அண்ணனை விட்டுக் கொடுக்காத சக்தி சுற்றி வந்து, கார்த்திக் பக்கம் அமர்ந்து கொண்டாள்.

நால்வரும் கலகலத்து சிரித்தனர். அவர்கள் அன்புக்கும், நட்புக்கும், காதலுக்கும்... அதோ பொங்கும் நுரையுடன் ஓடிவரும் அந்த அலைகளே சாட்சி.

இங்கே தினேஷ்,

"தின் தின் தினேஷ்"
என்று சொல்லியபடி, அவனுக்கு அவனே உற்சாகப் படுத்திக்கொண்டு, பிரியாவை நெருங்கினான்.

பிரியா கேட்டாள்..
"என்ன கிரிக்கெட்டா விளையாடப் போறீங்க?"

"ம்ஹூம், உனக்குப் பிடித்த செஸ். ஆனா நடுவுல "க்" சேர்த்துக்கணும்"

"ச்சே போங்க"

"ரூல்ஸ் கேட்டுக்க பிரியா"

"என்ன?"

"நான் ஒரு ஸ்டெப் முன்ன வருவேன், நீ ஒரு ஸ்டெப் முன்ன வரணும்"

வெட்கத்தில் பிரியா சரிந்து படுத்துக்கொள்ள, இவனும் சாய்ந்துவிட்டு சொன்னான்..

"நான் சைடாவும் வருவேன்"

பிரியா அந்தப் பக்கம் திரும்பிக்கொள்ள, குதித்து அந்த பக்கம் சென்றவன்,

"நான் தாவியும் வருவேன்" என்றான்.

அப்படி இப்படித் திரும்பி கடைசியில், அவள் ஒன்றும் செய்ய முடியாமல் லாக்காகி விட, கொஞ்சம் கொஞ்சமாக, ராணியை அடைந்தே விட்டான் தினேஷ்.
~~~~

முதல்நாள் பள்ளிக்குக் கிளம்பி நின்றான் குமரன். நந்தகுமார் மற்றும் மங்கையின், காலில் விழுந்து அவன் வணங்க, நந்தா, பேரனை அள்ளிக் கொண்டார். அவர்கள் அருகில் வந்த வர்ஷினி,

"குட்டி'மா ஸ்கூல்'ல உன் பேர் கேட்டா என்ன சொல்வ?"

"என் பேர் வெற்றி நந்தன். தாத்தா பேர் நந்தகுமார், அப்பா பேர் கார்த்திகேயன். போதுமா'மா?"

அனைவரும் சிரித்து வழியனுப்ப, அங்கே பள்ளியில் செந்தில் அவனைக் கைபிடித்து அழைத்து சென்றவன் சொன்னான்...

"என் அண்ணனோட பையன் நீ. இது உன் ஸ்கூல். நீ எந்தக் க்ளாஸ்ல வேணாலும் போய் உட்கார்ந்துக்கோ"

குமரன் தலையாட்ட, வர்ஷினி முறைத்துவிட்டு, அவனுக்கான வகுப்பும், பிரிவும் போட்டுக் கொடுத்து அனுப்பி வைத்தாள். அங்கே அவன் வகுப்பு ஆசிரியை பிரியா. சித்தியும், பிள்ளையும் சிரித்துக் கொண்டனர். பாடம் நடந்தது.

இப்படியாக, முதல்நாள் பள்ளிக்குச் சென்று வந்தவன், அங்கு படித்ததை வீட்டில் சொல்லிக் காட்டினான். மதிய உணவிற்குத் தாமதமாக வீட்டிற்கு வந்த கார்த்திக்கும் காக்கி சட்டையுடன் பார்த்திருந்தான்.

தினேஷ் கேட்டான்..
"இன்னைக்கு என்னடா படிச்ச?"

கழுத்தை ஆட்டிச் சொன்னான்..
"தமிழ், இங்கிலீஷ்"

"அப்ப சொல்லு... ஏ ஃபார்?"

"அம்மா, அப்பா, அத்த, ஆதி, அதி"

எல்லாரும் சிரிக்க,
"டேய், யாருடா உனக்கு கிளாஸ் டீச்சர்?"

"இதோ சித்தி தான்"

பிரியா அலறினாள்..
"இல்லைங்க, நான் ஏ ஃபார் ஆப்பிள்'னு தான் சொல்லிக் கொடுத்தேன்"

"குமரா, இப்படி பதில் சொன்னா மார்க் வராது டா"

"மார்க்'னா என்ன சித்தப்பா?"

"சுத்தம்"
என்று அவன் கையசைக்க, வர்ஷினி சிரித்துக் கொண்டே மாடியேறினாள். நைசாக நழுவி அவள் பின்னால் சென்றான் கார்த்திக்.

கேட்டான்..
"என்னடி பிள்ளை வளர்த்து வச்சிருக்க?"

சண்டைக்கு வந்தாள் வர்ஷினி..
"ஏன் இப்ப என்ன? அவன் சொன்னதுல என்ன தப்பு?"

"இப்படிப் படிச்சி அவன் டாக்டர், என்ஜினீயர்னு ஆகவா?"
என்று கார்த்திக் கிண்டல் செய்ய,

"ஏன் அது மட்டும் தான் படிப்பா? என் பையன் சட்டமேதை அம்பேத்கார் மாதிரி ஆவான்"

கார்த்திக் சிரித்தான்..
"உங்க சட்டம் எல்லாம் அரசியல்வாதிங்க கைக்குள்ள"

"அப்ப சரி, அவன் சட்டம் படிச்சி, நல்ல அரசியல்வாதி ஆவான்"

"பார்க்கலாமா?"

"பார்க்கலாம்"

"போலீஸ்காரன் கிட்டயே சவாலா?"
என்றபடி, கார்த்திக் பெல்ட்டை உருவ,

"ஒரு ஆசிரியர் கிட்டயே சவாலா?"
என்று வர்ஷினியும் சண்டைக்கு வர,

கார்த்திக் பெல்ட்டை மென்மையாக சுழட்டினான். அது அவள் இடுப்பை சுற்றிக் கொள்ள,

"இப்ப பதில் சொல்லுடி டீச்சரம்மா"

வர்ஷினி பெருமையாக சொன்னாள்...
"என் நாட்டை நான் ஆள ஏற்ற கல்வி தரும் தீரர்.. எம் ஆசிரியர்"

"ஆஹான்?"
என்றவன், அவள் இடுப்பில் இருந்த பெல்ட்டைப் பிடித்து லேசாக இறுக்கினான்.

"ஸ்ஸ்ஸ் கார்த்தி'பா"
என்று அவள் மெலிதாக கத்த, காதில் கேட்டான்..

"என் மாமனார் பெத்த மவளே, என் மகளை எப்ப பெத்து தரப்போற?"

"நீங்க தாலாட்டுப் பாடி என்னைத் தூங்க வைங்க அப்போ தரேன்"

"நாம தூங்கிட்டா மகள் எப்டி பிறக்கும்?"
என்றவனின் வாயைப் பொத்தினாள் வர்ஷினி.

அப்போது, படுக்கையறைக் கதவும், முன்கதவும் விரிய திறந்து கிடக்க, அங்கு,
"ம்மா"
என்று கத்தியபடி வந்தான் குமரன். கார்த்திக்கிடமிருந்து நகர்ந்து, வர்ஷினி கைகளை விரிக்க, பிள்ளை ஓடிவந்து அவள் மீது தொற்றிக் கொண்டது. வர்ஷினி குமரனோடு கட்டிலில் சரிந்தாள்.

கார்த்திக் அவர்களோடு சேராமல், ஒரு ச்சேரில் அமர்ந்து கைகட்டி, அவர்களை வேடிக்கைப் பார்த்தான். அரை மணிநேரம் சென்றும், இவனைக் கண்டு கொள்ளாமல் இருவரும் கதை பேசிக் கொஞ்சிக் கொண்டிருக்க,

மூன்று வருடங்கள்.. கொஞ்சம் பெரிய இடைவெளி தான். இட்டு நிரப்ப வேண்டும், மனைவி, பிள்ளையுடன் தானும் ஐக்கியமாக வேண்டும் என நினைத்தவன் எழுந்து, காக்கிசட்டை பட்டன் இரண்டை கழட்டிக்கொண்டே அவர்கள் அருகே சென்றான். சென்றவன், ஒரு காலை மடக்கி கட்டிலில் வைத்து பருந்தென இருகைகளை விரிக்க, அம்மா பையன் இருவரும் அலறினர்.

ஆளுக்கொரு பக்கம் உருண்டு ஓரம் சென்றுவிட, கார்த்திக் நடுவில் தொப்பென்று விழுந்தான். பின்னர், மனைவி பிள்ளை இருவரின் முதுகுக்குக் கீழ் கையிட்டுத் தன் மார்பின் மீது இழுத்துப் போட்டுக் கொண்டான்.

"ப்பா" என்று குமரனும்
"கார்த்தி'பா" என்று வர்ஷினியும் அவனை அணைத்துக் கொண்டனர்.

இரவில் மகனைத் தோளில் சுமந்து பாடினான்..

"தாய்மை வாழ்கென
தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆரோ
தங்க கைவளை
வைர கைவளை
ஆரிராரோ ஆரோ"

பாட்டின் சாரத்தில் கூடவே கார்த்திக்கின் காந்தக் குரலில், வர்ஷினி நெகிழ்ந்து விம்மினாள். குமரனை தனியே படுக்க வைத்துவிட்டு, வர்ஷினியிடம் வந்தவன்,
"அழாத பொண்ணு. தூங்கு" என்றான்.

இல்லை அவள் தூங்கவில்லை. கார்த்திக்கையே பார்த்திருந்தாள். கேட்டான்.

"ஏய் என்ன?"

'என்னது என்ன?"

"தூங்கல?"

"பொண்ணு வேணும்'னு கேட்டீங்க?"

"அதான் நீ இருக்கியே பொண்ணு" சிரித்துகொண்டே சொன்னான் கார்த்திக்.

"அப்ப வேணாமா?"

"நீ வேணும்"

என்றவன், வர்ஷினியின் கையைப் பிடித்து தன் சட்டையில் வைத்தான். இப்போதும் அவனையே பார்த்தபடி பட்டன்களை கழட்டினாள் வர்ஷினி. அந்தக் காக்கி சட்டைக்காரனின் கண்களில் காதலையும் மிஞ்சி, விஞ்சி நிற்கும் கனிவு... அதுதானே கீதவர்ஷினிக்கு இவ் வாழ்க்கை தந்தது? தன் வாழ்நாள் காவலனை ஆரத் தழுவிக் கொண்டாள். அன்றைய அவர்களின் அன்பில் உருவானது பெண்பிள்ளை.

~~

"தின் தின் தினேஷ்
தின் தின் தினேஷ்"

என்ற பார்வையாளர்களின் உற்சாகக் கூவலில், சிரித்துக் கொண்டே நடந்த தினேஷ், அவர்களுக்கிடையே அமர்ந்திருந்த தன் மனைவி பிரியாவைப் பார்த்துக் கண்ணடித்தான் லேசாக.

மொஹிந்தர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்க, இதோ இப்போதைய இங்கிலாந்து பயணத்திலிருந்து தினேஷ் தான் இந்திய அணியின் கேப்டன். போட்டியும் வெற்றிகரமாக முடிந்திருக்க, இந்திய அணிக்கானப் பரிசை தலைவணங்கிப் பெற்றுக்கொண்டான்.

கேட்டார்கள்...
"தினேஷ் கார்த்திக், கார்த்திக் என்பது உங்க தந்தையா?"

"இல்லை என் அண்ணன்"

அனைவரும் வியப்புடன் பார்க்க, சொன்னான்...

"எங்க வீட்ல என் அப்பா, அம்மா, தங்கச்சி, என் மச்சான், சொல்லப்போனா என் அண்ணனோட பழகுற எல்லாருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். எனக்கும். அதனால தான் அவருடைய பேரை என் பேருக்குப் பின்னாடி சேர்த்துக் கிட்டேன். இதுக்காக, எங்க ரெண்டு பேருக்கும் ஒரு சண்டை கூட நடந்திருக்கு"
என்று சொல்லி தினேஷ் சிரிக்க, எல்லோரும் சிரித்தனர்.

இக்காட்சியை வீட்டு ஹாலில் அமர்ந்து, தொலைக்காட்சியில்
பார்த்திருந்தனர் அவனுடைய குடும்பத்தினர். மங்கை அதிதியையும், வர்ஷினி ஆதித்தையும் மடியில் வைத்திருக்க, சக்தி தன் சின்ன அண்ணன் பேசுவதைக் கேட்டு, உற்சாகமாகக் கத்த, குமரனும் அவளோடு சேர்ந்து கொண்டான்.

ரிஷிதரின் தோளில் கைபோட்டு தன் தம்பியை புன்சிரிப்புடன், பார்த்திருந்தான் அச்சு வெல்லக்கட்டிக் கார்த்திக்.

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த நந்தகுமார், கார்த்திக்கையே இதமானப் புன்னகையுடன் பார்த்திருக்க சற்றுத்தள்ளி சுவரில் படமாக இருந்த வெற்றியின் இதமானப் பார்வை நந்தகுமாரைப் பார்த்தபடி இருந்தது. நந்தாவின் மகிழ்வான முகம் வெற்றியின் முகத்திலும் சுடராக ஜொலித்தது.


"வாழ்வென்பது வரம்
வாழ்ந்துவிடுவதே நலம்"

சுபம்.


கதை படித்த அனைவருக்கும் நன்றியும், அன்பும் 💜
 
மிக மிக அருமையான கதை கொடி சிஸ்டர்.

ஆரம்பம் முதல் இறுதி வரை அழகான நடையில் கொடுத்திருந்தீங்க. அங்கங்கே கொத்து கொத்தாக கருத்து பூக்கள் மலர்ந்திருந்தது. தினேஷ் வரும் இடமெல்லாம் நகைப்பு பூக்கள் நெஞ்சை அள்ளியது. 💖💖💖

காவலனின் கண்டிப்பான கடமை, கண்டித்தபின் காட்டும் கனிவு, நாட்டு நலனுக்காக போராடும் போராட்டத்தில் மற்றவர்களையும் கைகோர்க்க வைக்கும் உணர்வைத் தூண்டி, எங்கள் உள்ளத்தை மொத்தத்தில் கொள்ளை கொண்ட கதை.💞💞💞

காதலின் கவித்துவம், நட்பின் சிறப்பு, குடும்பத்தின் பாசம், தமிழின் சுவை, திருக்குறளின் மேன்மை, குட்டி, குட்டி கவிதைகள், கதைகள், இப்படி நிறைய பொக்கிஷங்கள் நிறைந்துள்ளது. 🥳🥳🥳

யார் வாசிக்கிறார்கள், எத்தனை பேர் கமெண்ட் போடுகிறார்கள், எதைப் பற்றியும் சட்டை செய்யாமல் எடுத்த கதையை விடாமல் தினம்தோறும் பதிவிட்டு அசத்திய உங்கள் கடமை உணர்வு .மிகப் பெரிய பாராட்டுக்குரியது.👏👏👏👏👏👏👏👏👏👏👏
 
மிக மிக அருமையான கதை கொடி சிஸ்டர்.

ஆரம்பம் முதல் இறுதி வரை அழகான நடையில் கொடுத்திருந்தீங்க. அங்கங்கே கொத்து கொத்தாக கருத்து பூக்கள் மலர்ந்திருந்தது. தினேஷ் வரும் இடமெல்லாம் நகைப்பு பூக்கள் நெஞ்சை அள்ளியது. 💖💖💖

காவலனின் கண்டிப்பான கடமை, கண்டித்தபின் காட்டும் கனிவு, நாட்டு நலனுக்காக போராடும் போராட்டத்தில் மற்றவர்களையும் கைகோர்க்க வைக்கும் உணர்வைத் தூண்டி, எங்கள் உள்ளத்தை மொத்தத்தில் கொள்ளை கொண்ட கதை.💞💞💞

காதலின் கவித்துவம், நட்பின் சிறப்பு, குடும்பத்தின் பாசம், தமிழின் சுவை, திருக்குறளின் மேன்மை, குட்டி, குட்டி கவிதைகள், கதைகள், இப்படி நிறைய பொக்கிஷங்கள் நிறைந்துள்ளது. 🥳🥳🥳

யார் வாசிக்கிறார்கள், எத்தனை பேர் கமெண்ட் போடுகிறார்கள், எதைப் பற்றியும் சட்டை செய்யாமல் எடுத்த கதையை விடாமல் தினம்தோறும் பதிவிட்டு அசத்திய உங்கள் கடமை உணர்வு .மிகப் பெரிய பாராட்டுக்குரியது.👏👏👏👏👏👏👏👏👏👏👏
தெரியாதவங்கன்னு ஒதுக்காம நீங்க வாசிச்சீங்களே.. அதுவே எனக்கு ஊக்கமா இருந்துச்சி. கதையின் எல்லா பகுதியும் அழகா விமர்சனம் கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றி 🤗💜💜💜💜💜💜
 
ரொம்ப ரொம்ப அழகான கதை ஜி❤️
கதை முழுதும் திருக்குறள் பயணித்தது சூப்பர், நான் ரொம்ப நாளைக்கி அப்புறமா குறள்களை படித்தேன்😍❤️❤️😍
நேரமின்மை காரணமா லேட்டா படித்து முடித்தேன் ஜி🙏
 
ரொம்ப ரொம்ப அழகான கதை ஜி❤️
கதை முழுதும் திருக்குறள் பயணித்தது சூப்பர், நான் ரொம்ப நாளைக்கி அப்புறமா குறள்களை படித்தேன்😍❤️❤️😍
நேரமின்மை காரணமா லேட்டா படித்து முடித்தேன் ஜி🙏
ரொம்ப நன்றி உங்க அன்பான விமர்சனத்துக்கு 🤗💜
 
Back
Top