VanishaAdmin
Moderator

மரணத்தின் தேதி தெரியாத வரைதான் மனிதனின் வாழ்க்கை இனிக்கும். அது தெரிந்து விட்டால், உயிர் உடலில் ஒட்டி இருந்தாலும் அவன் பிணத்துக்குச் சமானம்தான்.
சூதாட்டம்!! விளையாட்டாய்தான் அதில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் ஜெயித்த போதை, தோற்கும் போதும் மீள விடவில்லை. விட்டதைப் பிடிக்கலாம் எனக் கடன் வாங்கி விடியலே இல்லாமல் போய் விட்டது! கடன் சுமையைத் தாங்க முடியவில்லை! எதையாவது இழந்து, வாழ்க்கையை மீட்கலாம் என நான் செய்த செயல் மரணத் தேதியைக் குறித்து விட்டது!!
"தொடை நடுவுல மூனு பாக்கேட் தூள கட்டி விடுவாங்க! மலேசியால இருந்து கொண்டு போய் சிங்கப்பூர்ல சேர்த்துட்டா போதும்!! கடனும் அடைஞ்சிடும்! லைஃபும் செட்டில் ஆகிடும்"
பயமாய்த்தான் இருந்தது! ஆனாலும் சூழ்நிலை மென்னியைப் பிடித்துத் திருக, பயம் பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடி விட்டது! எவனும் பிடிக்க மாட்டான் எனும் குருட்டுத் தைரியம்!! அந்தோ பரிதாபம்!! அதிர்ஷ்டம் என் பக்கம் இல்லாமல் போய் விட்டது! மாட்டிக் கொண்டேன்! சிங்கப்பூரில் போதை மருந்து கடத்திக் கொண்டு வருபவருக்கு மரணத் தண்டனை நிச்சயம் எனத் தெரிந்திருந்தும் மாட்டிக் கொண்டேன். கண் முன்னே பெற்றவர்களின் பிம்பமும், கூடப் பிறந்தவர்களின் முகமும் வந்து நிற்கிறது. எனக்காக என் சகோதரிகள் படும் பாட்டைக் கேள்விப் படும் போது கண்ணீர் வழிந்தோடுகிறது!! தூக்குத் தண்டனை யாருக்குமே கொடுக்கக் கூடாது என அமைப்பு ஒன்றைத் தொடங்கிப் போராடுகிறார்கள் என் கண்மணிகள்! என்ன தவம் செய்தேன் நான் அவர்களைச் சொந்தமாய் பெற. கொஞ்சம் யோசித்திருக்கலாமே நான்!! உடம்பை ஒடுக்கும் இந்தப் போதைப் பொருளைக் கடத்த முயன்ற போது, கொஞ்சமே கொஞ்சம் யோசித்திருக்கலாமே நான்! மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கும் இத்தனை வருடக் கொடுமையான நாட்களில் நான் நினைப்பதெல்லாம் 'கொஞ்சம் யோசித்திருக்கலாமே நான்' என்பது மட்டும்தான்!!
போய் வருகிறேன்! என்னைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! முடிந்தால் என் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்! போகிறேன் நான்!! இருட்டைத் தேடிப் போகிறேன் நான்!! திரும்பி வர முடியாத வழி தேடிப் போகிறேன் நான்!!
(பன்னீர் செல்வம்-- DOB--31 July 1987
DOD- 8 Oct 2025)