• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

முள்ளில் பூத்த மலரே 20 & 21

Narmadha Subramaniyam

Well-known member
1000270645.jpg

ஆதினி அகிலன் திருமணம் வரையில் பதிவிட்டு விடலாம் என்று இரு அத்தியாயங்களையும் சேர்த்துப் பதிவிட்டிருக்கிறேன்.

வாசித்து மகிழுங்கள்.


அத்தியாயம் 20

"கிளம்பிட்டியா ஆது" வீட்டின் முகப்பறையில் அமர்ந்து ஆதினியின் அறை நோக்கி குரல் கொடுத்தான் மதுரன்.

"இதோ வந்துட்டேன்" எனக் கூறி லெகின்ஸ் டாப் அணிந்து, நீள முடியை பின்னலிட்டு வந்திருந்தாள் ஆதினி.

தாய் தந்தையரிடம் போய் வருவதாய் கூறி சென்றனர் இருவரும்.

மதுரனின் யமாஹா இரு சக்கர வாகனத்தில் ஏறிய ஆதினி, "டேய் அண்ணா வேற வண்டி வாங்க கூடாது! உன் வண்டில பின்னாடி உட்காரவே பயமா இருக்கு! நீ சடன் ப்ரேக் போட்டா நான் சடன்னா தூக்கி போட படுவேன். எவன் தான் இந்த வண்டியோட பின் சீட்டை டிசைன் செஞ்சானோ! அப்பா புல்லட் இருக்கே... அது வண்டி.. பின்னாடி உட்கார அவ்ளோ கம்ஃப்ர்ட்டபிளா இருக்கும்" வண்டியிலேறும் நேரமெல்லாம் கூறும் அதே வசனத்தை எழுத்து மாறாது அப்படியே அவள் கூறவும் வாய் விட்டு சிரித்தான் மதுரன்.

"சரி எங்க போய்ட்டு இருக்கோம்னு சொல்லு?" ஆதினி கேட்க,

"இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே பார்க்க தானே போற" என்றவன் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் வண்டியை நிறுத்தினான்.

இது அவர்கள் வழமையாய் செல்லும் ஐஸ்க்ரீம் பார்லர்.

"ஹய்யா! இங்க வர தான் இவ்ளோ பில்டப் கொடுத்தியா? நான் கூட ஐஸ்க்ரீம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேனு யோசிச்சிட்டு இருந்தேன். நீயே கூட்டிட்டு வந்துட்ட மை ஸ்வீட் அண்ணா" வண்டியிலிருந்து இறங்கியவள் அவன் கன்னம் கிள்ளிக் கொஞ்சினாள்‌.

அக்கடையினுள் நுழைந்து இவர்கள் வழமையாய் அமரும் இருக்கையை அவள் பார்க்க, அங்கே ஏற்கனவே ஒரு ஆடவன் அமர்ந்திருப்பதை கண்டவள், "அண்ணா! சீட் போச்சே" என மதுரனின் காதினுள் முனகினாள்.

"நமக்கு தெரிஞ்சவர் தான் அவரு" எனக் கூறி கொண்டே அங்கு அமர்ந்திருந்தவனின் முன்னே சென்று மதுரன் கை குலுக்க, அங்கே அகிலனை கண்டு திகைத்து விழித்தாள் ஆதினி.

அன்றைய நாளிற்குப் பிறகு அகிலனிடம் இவள் பேசாது இருந்ததால், அவன் மேல் இவளுக்கு கோபமென தவறாய் புரிந்து கொண்ட அகிலன், தனது மனத்தின் சங்கடத்தை நண்பனான மதுரனிடம் பகிர்ந்தான். அப்போது மதுரன் தனது தாய் உரைத்ததைக் கூறினான். இருப்பினும் ஆதினியிடம் சில முக்கியமான விஷயங்கள் நிச்சயத்திற்கு முன் பேச வேண்டுமென எண்ணிய அகிலன் மதுரனிடம் ஆதினியைச் சந்திக்க வேண்டுமென்ற தனது எண்ணத்தை கூறவும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தான் மதுரன்.

"டேய் அண்ணா! அம்மாக்கு தெரிஞ்சிது அவ்ளோ தான்! கிளம்பு நீ முதல்ல" அகிலனிடம் தன் பார்வையையும் செலுத்தாது மதுரனின் காதில் கூறிக் கொண்டே அவன் கை பற்றி அவள் இழுக்க,

"என் அறிவாளி தங்கச்சி! அம்மாக்கு தெரியாம உன்னை கூட்டிட்டு வருவேனா? நான் கூட இருக்கேன்றனால தான் ஒத்துக்கிட்டாங்க" மதுரன் விளக்கி கூறவும்,

சரியென தலை அசைத்து மதுரன் அருகில் அமர்ந்து கொண்டாள் ஆதினி.

அவளால் அகிலனின் முன்பு இயல்பாய் இருக்க முடியவில்லை. அவனின் முகத்தைக் காணவும் நாணம் தடுக்க, அவனிடம் பேசவும் வழியறியாது அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

அகிலன் அவளை மட்டுமே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, தனக்கு அழைப்பு வந்திருப்பதாய் கூறி கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் மதுரன்.

அவன் சென்றது இவளை இன்னும் பதட்டமடைய செய்ய, "என் கிட்ட என்ன பயம் கண்ணுமா" என்றான் அகிலன்.

சட்டென நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவளின் கண்கள், இத்தனை நாட்களாய் அவனிடம் கூறாமல், கூற முடியாமல் மனதில் அவனுக்காக தேக்கி வைத்திருந்த நேசத்தை சொல்லாமல் சொல்ல, அதை கண்டு கொண்ட அகிலனின் கண்களோ அவனின் காதலை எடுத்தியம்பியது.

அவளை இயல்பாக்கும் பொருட்டு அலுவல் நிகழ்வுகளைப் பேசலானான்.

அவள் அலுவல் செய்திகளை வெகு ஆர்வமாய் கூறி கொண்டிருக்க, ஆனால் அவனோ தன் காதினுள் ரீங்காரமிடும் இளையராஜா இசையுடன், அவளின் இதழசைவையும், பேசும் போது அவளின் முகம் காட்டும் பாவனைகளையும், அவள் கண்களின் அசைவுகளையும், பூரித்திருக்கும் கன்னங்களையுமென அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான். அவள் கூறிய விஷயங்கள் எதுவும் அவன் காதில் விழவில்லை.

தன்னவள், தனக்கானவள், தனக்காய் இப்பூமியில் பிறப்பெடுத்தவள் என்றெல்லாம் எண்ணங்கள் தோன்ற, பூரிப்பின் விளிம்பில் காதல் பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

அந்நேரம் ஏனோ ஓர் ஆவல் தோன்ற, அவனது அலைபேசியிலிருந்து அவளுடைய எண்ணிற்கு அழைப்பு விடுக்க, மேஜை மீது வைத்திருந்த அவளது கைப்பேசி, "கண்ணை காட்டு போதும் நிழலாக கூட வாரேன்" என்ற பாட்டைப் பாடி அழைப்பைத் தெரிவித்த நொடி, பதட்டமாய் பட்டென கைப்பேசியை கையினில் எடுத்து அதை ஒலியற்ற நிலைக்கு மாற்றினாள் ஆதினி. ஆனால் அவள் கையினில் எடுத்த நேரத்திற்குள் அவனின் பெயரை என்னதாய் அவள் சேமித்து வைத்திருக்கிறாளென கண்டு கொண்டான் அவன்.

அவன் கண்டு கொண்டதில், 'அய்யோ அவன் தன்னை என்ன நினைப்பானோ' மனம் படபடக்க, முகத்தில் வெட்கம் பரவ தனது பார்வையை அவனது முகத்தினிலிருந்து திருப்பிக் கொண்டாள் ஆதினி.

ஆனால் அவனோ குழம்பிய நிலையில், அதென்ன SR எனக் கேட்டான்.

அவன் அவளது கைப்பேசிக்கு அழைத்த நொடி "SR" என்ற பெயரே கைப்பேசியில் ஒளிர்ந்தது.

அப்பொழுது தான், 'அட ஆமால ஷார்ட் ஃபாரம்ல தானே அந்த பெயரை சேவ் செஞ்சிருக்கோம்' ஞாபகம் வந்த நொடி, 'ச்சே இவர் கூட இருந்தா மூளை வேலை செய்றத நிறுத்திடுதே' தனக்குத் தானே பேசிக் கொண்டவள்,

"அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க" அவனைக் குழப்பி விட்ட குதூகலத்தில் சிரித்துக் கொண்டே உரைத்தாள்.
அவளின் கண்களோ முழுவதுமாய் அவனை தான் முழுங்குவதாய் பார்த்து கொண்டிருந்தன.

அவனை எண்ணும் நேரமெல்லாம், இப்பெயரை மனத்தோடு கூறி கொஞ்சிக் கொள்ளும் நிகழ்வுகளெல்லாம் அவள் நினைவலையில் ஊர்வலம் போக, அவளையும் மீறி அவனை மட்டுமே இமை சிமிட்டாது பார்த்திருந்தாள் ஆதினி.

அவனோ தனது பெயரை சுருக்கிப் பார்த்து, தமிழில் இருக்கின்ற செல்ல பெயரைலாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து என அந்த SRஐ கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்க,
அவன் செய்த அதே வேலையை இப்பொது அவள் செய்தாள். அவனின் கைப்பேசிக்கு இவள் அழைப்பு விடுத்தாள்.

"கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா" என்ற அழைப்பொலியுடன் அவனின் கைப்பேசி அதிர, இப்போது அதிர்ந்து படபடத்து நாணங் கொள்வது அவனின் முறையாயிற்று.

அவனே தனது கைப்பேசியை எடுத்து அதில் மின்னிய பெயரை அவளிடம் காண்பிக்க, இல்லாள் என ஒளிர்ந்தது அங்கே.

அதை பார்த்தவளின் கண்களோ இன்பமாய் அதிர்ந்து விரிய, மனம் பூரிப்பில் நெகிழ, "என்ன நடந்தாலும் என்னை தான் கல்யாணம் செஞ்சிப்பீங்கன்றதுல முடிவா இருக்கீங்களா அகிலன்" எனக் கேட்டாள்.

அவள் கேள்வியில் அதிர்ந்தவன், "என்ன கண்ணுமா இப்படி கேட்டுட்ட? சும்மா டைம் பாஸுக்கு உன்கிட்ட பேசுற மாதிரியா தோணுது உனக்கு" சற்று கோபமாய் கேட்டான்.

"அய்யோ அப்படி இல்லங்க. நான் கேட்க வந்த அர்த்தம் வேற" தவறாய் புரிந்து கொண்டானே என்ற பதைபதைப்புடன் கூறியவள்,

"மனசுல ஆசையை வளர்த்த பிறகு இது நடக்காம போய்ட்டா கஷ்டமாயிடுமேனு தான் அம்மா உங்ககிட்ட பேச கூடாதுனு சொல்லியிருந்தாங்க. ஆனாலும்" என்றவள் மனம் படபடக்க சற்றாய் நிறுத்தினாள்.

"ஆனாலும்?" சுவாரசியமாய் அவள் முகத்தை பார்ததுக் கொண்டே அவன் கேட்டான்.

மேஜையில் கை வைத்திருந்தவள் தனது கையை நோக்கிக் கொண்டே, "ஆனாலும் என்னை மீறி உங்ககிட்ட ஓடிப் போகுற மனசைக் கட்டுபடுத்த முடியலை. எப்பவும் உங்க நினைப்பாவே இருக்கு. இது காதலானுலாம் தெரியலை. ஆனா உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்காக நீங்க செய்ற குட்டி குட்டி விஷயத்தையும் மனசு ரொம்ப ரசிக்குது" என உரைத்தவள் சற்றாய் நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தவளாய்,

"என்னை விட்டுட்டு போய்ட மாட்டீங்கல? நம்ம கல்யாணத்துல எந்த பிரச்சனை வந்தாலும் எனக்காக நின்னு போராடுவீங்களா? நீங்க இல்லமா வாழ முடியாதுனுலாம் இல்ல. ஆனா நீங்க வேணும். என் வாழ்க்கை முழுதும் வேணும்னு மனசு சொல்லுது" என்றவள் கூறிய நொடி,

இத்தனை நேரமாய் அவள் கூறிய சொற்களில் சந்தோஷத்தின் விளிம்பில் இருந்தவன், அவள் கடைசியாய் "நீங்க வேணும்" எனக் கூறியதை கேட்ட நொடி, "ஐ ப்ராமிஸ் யூ கண்ணுமா! இந்த ஜென்மத்துல என்னோட மனைவினா அது நீ மட்டும் தான்" என்றான்.

"என் அப்பா மாதிரி என்னை அன்பா கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பீங்களா? என் அண்ணா மாதிரி என்கிட்ட பாசமா விட்டு கொடுத்து போவீங்களா?" தனது ஆசைகளையெல்லாம் கேள்வியாய் கேட்டாள்‌.

"அந்தளவுக்கு நான் இருப்பேனானு எனக்குத் தெரியலை. ஆனா நமக்குள்ள சண்டை வந்தா மன்னிப்பு கேட்குற முதல் ஆளு நானா தான் இருப்பேன். என்னிக்குமே நமக்குள்ள ஈகோ வராம பார்த்துப்பேன். உன் மனசு கஷ்டபடாம பார்த்துப்பேன். இது எல்லாத்துக்கும் மேல" என உரைத்து அவளின் கைகளைப் பற்றியவன்,

"என் ஆயுசு முழுக்க உன்னை காதலிச்சிட்டே இருப்பேன்" அவளின் விழி நோக்கி உரைத்தான்.

அவன் கூறியவற்றில் பரசவத்தின் உச்சத்தில் இருந்தாலும் அவன் மீது பார்வைப் பதித்துக் கொண்டே அவனது கரத்திலிருந்து தனது கைகளை உருவிக் கொண்டாள்.

சுற்றம் மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் இமை சிமிட்டாது விழிகளுக்குள் விழுங்கி கொண்டு அமைதியாய் அந்நொடியினை சுகித்திருந்தனர்.

"என்னடா அகி பேச வேண்டியதுலாம் பேசியாச்சா" என கேட்டுக் கொண்டே வந்தமர்ந்தான் மதுரன்.
 
ஆமா இல்லையென அவன் இருபுறமும் தலையாட்ட, "அடேய் ஒரு பக்கமா தலையாட்டுடா" என்றான் சிரிப்புடன்‌.

"சரி ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணுடா. அப்படியே பேசிட்டே சாப்பிடுடுவோம்" என்று அகிலன் கூறவும்,

"அடப்பாவிங்களா! இன்னும் ஆர்டர் கூட கொடுக்காம என்னடா பண்ணீங்க" என இருவரையும் முறைத்தவன்,

அங்கிருந்த வேலையாளை அழைத்து, "அண்ணா எப்பவும் கொடுக்கிறேதே கொடுங்கண்ணா" என்றான்.

"நீங்க எப்பவும் வர்ற இடமா இது!" அகிலன் கேட்க,

"ஆமாடா! இங்க கொடுக்கிற இளநீர் ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் ஆதுவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமில்லாம இங்கே எல்லா மில்க் ஷேக் அண்ட் ஐஸ்க்ரீம் செம்ம டேஸ்ட்டா இருக்கும்! அதனால நானும் ஆதுவும் அடிக்கடி வருவோம்" என்றான் மதுரன்.

ஆதினியை பார்த்த அகிலன், "என் ஃபேமிலியை பத்தி உன்கிட்ட சொல்லனும் க... ஆதுமா" கண்ணுமா என கூற வந்து மதுரன் இருப்பதால் ஆதுமா என்றான்.

"ஹ்ம்ம் சொல்லுங்க" என்றவள் கூறவும்,

"எங்க அப்பா அம்மா லவ் மேரேஜ்" என்றான்.

"ஓ சூப்பர். அப்ப ஆதர்ச தம்பதிகளாய் வாழ்ந்துட்டு இருப்பாங்கல" வெகு ஆர்வமாய் ஆசையாய் ஆதினி கேட்க,

மதுரனை ஒரு பார்வை பார்த்த அகிலன், எடுத்ததும் தனது தாய் தந்தையரைக் குறை கூற விரும்பாதவனாய், "அவங்க வீட்டுக்கு தெரியாம ஓடி வந்து கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க" என்றான்.

இச்செய்தி அவளுக்கு உவப்பானதாய் இல்லாமல் போக, "ஓ அப்படியா?" குரல் சுருங்கிப் போய் உரைத்தாள் அவள்.

"அம்மா வீடு பெரிய பணக்கார குடும்பம். அம்மாக்கு இரண்டு அண்ணன்ங்க இருக்காங்க. அப்பா விவசாயியா இருந்தாங்களாம். ஒரு தம்பி இருக்காரு. இரண்டு வீட்டுலயும் ஒத்துக்கலை. அம்மா அப்பாவை தான் கட்டிப்பேனு அடம்பிடிக்க அப்பாவை கொலை பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க அம்மாவோட அண்ணன்ங்க"

"அய்யோ யூ மீன் கௌரவ கொலை" ஆதினி கேட்க,

"அது அம்மாவை கொன்னா தானே கௌரவ கொலை? அப்பாவை கொல்ல முயற்சி செஞ்சா எப்படி அது கௌரவ கொலை ஆகும்" என அகிலன் அதுக்கு விளக்கமளித்ததை பார்த்து பல்லை கடித்த மதுரன்,

"அடேய்களா! எப்படி பார்த்தாலும் அது ஒரு கொலை முயற்சி. அதுக்கு ஷாக்காகாம அது கௌரவ கொலையா, சாதாரண கொலையா, ஆணவ கொலையானு ஆராய்ச்சி பண்றீங்க பார்த்தீங்களா! நல்ல செட்டு சேர்ந்தீங்கடா" எனத் தலையில் அடித்துக் கொண்டான்.

அவனை பார்த்து இருவரும் சிரித்திருந்தனர்.

"அப்புறம் என்னாச்சு?" ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டே கேட்டாள் ஆதினி.

"அப்பாவை உயிரோட காப்பாத்த ஊரைவிட்டு அப்பா கூடவே வந்துட்டாங்க அம்மா! சோ எங்களுக்கு சொந்தகாரங்கனு யாரும் கிடையாது. இருந்தும் இல்லைனு சொல்லலாம்" இது தான் அப்பா அம்மா எனக்கு சொன்ன கதை" என அகிலன் கூறி முடிக்கவும்,

"உங்கம்மாகிட்ட சொன்னியா? உன் தங்கச்சிக்கு வந்த மேரேஜ் ப்ரோபோசல்லாம் கெடுத்து விட்டது அவங்க அண்ணன்களும் அவங்க குடும்பமும் தான்னு" எனக் கேட்டான் மதுரன்.

இல்லையென அகிலன் தலையாட்ட, "என்னணா சொல்ற?" எனக் கேட்டாள் ஆதினி.

"உன்னை கல்யாணம் செஞ்சிக்கனும்னு அகிலன் விருப்பப்படுறாருனு தெரிஞ்சதுமே அகிலனைப் பத்தி முழுசா விசாரிச்சிட்டோம்! அகிலனுக்கு தெரியாத பல குடும்ப ரகசியங்கள், அவங்களுக்கு இருக்க எதிரிகள்னு எல்லாம் எங்களுக்கு தெரிய வந்துச்சு" என்ற மதுரன்,

"அகிலனோட தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தப்போ, அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்கலாம் ஊர்ல இவங்களைப் பத்தி விசாரிச்சதுல, இவங்களைப் பத்தி தப்பா சொல்லி, வந்த மாப்பிள்ளை எல்லாத்தையும் தட்டி விட்டிருக்காங்க இவங்க அம்மாவோட அண்ணன் குடும்பத்தாளுங்க" என்றான்.

"அம்மா இன்னும் அவங்க அண்ணன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க. அதனால தான் சொல்ல மனசு வராம இருக்கேன். இனி ஒன்னும் இவங்க போய் அவங்க அண்ணன்கள பார்க்க போறது கிடையாது. எதுக்கு தேவையில்லாம பிரச்சனை கிளப்பிக்கிட்டுனு விட்டுட்டேன்" என்றான் அகிலன்.

மதுரனிடம் இதை பற்றி பின்பு விவரமாய் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமென மனத்தில் குறித்துக் கொண்டாள் ஆதினி.

வீட்டிற்கு வந்த அகிலன் தனது தாய் தந்தையரை அமர வைத்து ஆதினியின் குடும்பத்தைப் பற்றிக் கூறினான்.

"அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காதுன்றனால தான் அந்த வீட்டுல அந்தஸ்துனுலாம் பார்க்காம உனக்கு கட்டிக் கொடுக்க ஒத்துக்கிட்டாங்களா?" என்றார் சத்யா.

"ம்மாஆஆ" என பல்லைக் கடித்தான் அகிலன்.

"என்ன பேச்சு இது சத்யா?" எனக் கண்டித்தார் தர்மன்.

"உன் பையன் தான் தவமா கிடந்து, அந்த பொண்ணை தான் கட்டிப்பேனு அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசி ஒத்துக்க வச்சான். அவங்க நினைச்சா நம்மளை விட வசதியான ஆடம்பரமான இடத்துல அவங்க பொண்ணை கட்டிக் கொடுக்கலாம். ஆனா அவங்க குணத்தை தான் பார்க்கிறாங்க பணத்தை பார்க்கலை" தர்மன் கூறவும்,

"என்னடா இப்பவே அப்பாவும் பிள்ளையும் அந்தக் குடும்பத்துக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றீங்க! அந்தப் பொண்ணு வந்ததும் என்னை கண்டுக்காம விட்டுடுவீங்க போலயே" எனக் கேட்டு கொண்டே தனது வேலையைப் பார்க்க சத்யா சென்று விட,
தந்தை மகன் இருவரும் தலையிலடித்து கொண்டு ஒருவர் மற்றவரை பார்த்துக் கொண்டனர்.

"எப்படிப்பா இந்த அம்மாவைச் சமாளிக்கிறீங்க?" வாய்விட்டே புலம்பினான் அகிலன்.

இது தான் சத்யாவின் சுபாவம். மனதிலுள்ளதை படபடவென பேசிவிடுவார். எதிரிலுள்ளோர் காயப்படுவார்களே என்றெல்லாம் எண்ணவே மாட்டார். அப்படி அவர்கள் காயப்பட்டதாய் தெரிந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டார். அதனாலேயே தர்மன் அவரை எங்கும் அழைத்து செல்ல மாட்டார்.

எவ்வாறு ஆதினி தனது தாயை சமாளிக்க போகிறாளோ என எண்ணும் போதே பயம் ஆட்கொண்டது அவனுக்கு.

கடவுள் தான் வழி காண்பிக்க வேண்டும் என மனத்தினுள் வேண்டிக் கொண்டான்.

அதன் பின்பு வந்த நாட்களில் பெண் பார்க்கும் படலம் இனிதாய் நிகழ்ந்தேற, நிச்சய நாளில் தேதியை முடிவு செய்து கொள்ளலாம் என கூறிச் சென்றனர்.

புதிய வீட்டு வேலை மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என உரைத்த அகிலன், திருமணத்திற்குப் பின் சொந்த இல்லத்தில் தான் ஆதினி குடியிருப்பாள் என்பதில் உறுதியாய் இருப்பதாய் உரைத்து நான்காவது மாதத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம் என கூறினான்.

புதுப்பிக்கபட்ட மாணிக்க மலர் பவன இல்லத்திலேயே நிச்சயம் வைத்து கொள்ளலாமென முடிவு செய்யப்பட்டது. திருமணத்தை சென்னையிலேயே மண்டபத்தில் நிகழ்த்தலாமென முடிவு செய்தனர்.

அந்த குடியிருப்பில் இவர்களின் திருமண நிகழ்வே பெரிய கதையாய் பரவியது. வாடகை இருப்பவனிடம் பேசவே கூடாதென அங்கிருந்தோர் கூறியிருக்க இவர்கள் வீட்டு பெண்ணையே மணமுடித்து வைக்கிறார்களேயென ஆச்சரியமாக சிலரும், காழ்ப்புணர்ச்சியுடன் சிலரும், பொறாமையுடன் சிலரும், இவர்களின் பெருந்தன்மையைப் போற்றி சிலரும் என அந்தக் குடியிருப்பு முழுவதும் இதுவே முக்கிய செய்தியாய் பரவியது.

அன்று மாணிக்கத்திடம் அலைபேசியில் பேசி முடித்து அமர்ந்த தர்மனிடம் வந்து நின்ற அகிலன், "மாமா என்ன சொன்னாங்கப்பா?" எனக் கேட்டான்.

"அகிலன் சொன்ன மாசத்துலே நாலு முகூர்த்த தேதி இருக்கு, அதுல பொண்ணுக்கு தோதுவா இருக்க தேதியில கல்யாணம் வச்சிக்கலாம்னு நான் சொன்னேன். அதுக்கு அவங்க, 'பொண்ணுக்கு தோதுவாவும் பாக்கனும் அதே நேரம் எங்க பக்கம் ஒரு சொந்தகாரங்க வெளியூர்ல இருக்காங்க. அவங்க இங்க வந்து கல்யாணத்துல கலந்துக்க கூடிய தேதியாவும் பார்க்கனும். அதனால நான் பேசிட்டு சொல்றேனு சொன்னாரு" மாணிக்கம் கூறியதை தர்மன் உரைக்க,

"அவங்களுக்கு சொந்தகாரங்க யாருமில்லைனு தானே மாணிக்கம் மாமா சொன்னாங்க. அது யாரு அவ்ளோ முக்கியமான ஆளு" என சிந்தித்திருந்தான் அகிலன்.
 
அத்தியாயம் 21

ஆதினி அகிலனின் திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முந்தைய அந்த இரவில், மாணிக்க மலர் பவன இல்லத்தில், தங்களது படுக்கையறையின் மெத்தையில் மலரின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார் மாணிக்கம்.

மனமெல்லாம் வேதனை சூழ்ந்திருந்தது அவருக்கு. கண்கள் அவ்வலியை பிரதிபலித்திருந்தன.

அவரின் தலையை மலர் கோத, "பொண்ணுங்களையே பெத்துக்கிட கூடாது பேபிமா" வெகுக் கலக்கமாய் உரைத்தார் மாணிக்கம்.

"ஹான்... அப்படி எங்கப்பா நினைச்சிருந்தா நான் உங்களுக்குக் கிடைச்சிருப்பேனா?" என்று மலர் கேட்க,

தொண்டை அடைக்கும் துக்கத்தை எவ்விதம் உள்வாங்குவதெனப் புரியாது கண்ணீர் உகுத்தார். அவரின் விழிகளிலிருந்து காதிற்குப் பயணித்த கண்ணீரைக் கண்ட மலரோ அதிர்ந்து பரிதவித்து,

"அய்யோ ஏன்ப்பா! பொண்ணா பிறந்துட்டா ஒரு நாள் கல்யாணமாகி வேற வீட்டுக்குப் போகத் தானே வேணும். அதுக்கு ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க" என அவரைத் தேற்றினார்.

"அப்பாஆஆ... அப்பாஆஆஆனு என் கழுத்தை கட்டிகிட்டு பின்னாடியே சுத்துற பொண்ணு இனி என் கூட இருக்க மாட்டானு நினைக்கவே மனசு வலிக்குது பேபிமா! அவளுக்கு மாப்பிள்ளை அமையாத வரைக்கும், மாப்பிள்ளை அமையலையேனு கவலையா இருந்துச்சு. இப்ப நம்மளையெல்லாம் விட்டுட்டு மாப்பிள்ளையோட போய்டுவாளேனு கவலையா இருக்கு" என்றுரைத்து சற்று நேரம் அமைதியானவர்,

"ஆனா இது தானே நிதர்சனம்! ஏத்துக்கிட்டு தான் ஆகனும்" எனக் கூறிக் கொண்டே எழுந்தமர்ந்தார்.

"எனக்கு அதை விட அகிலனைக் கட்டி வைக்கலாம்னு நீங்க சொன்னதுல இருந்து மனசு என்னமோ நெருடலாவே இருக்குப்பா! நீங்களும் மதுவும் அவ்ளோ விசாரிச்சிருந்தாலும் நம்ம பொண்ணுக்கு அங்க எதுவும் செட் ஆகாத மாதிரி இருந்துடக் கூடாதே! அவ மனசு கஷ்டபடுற மாதிரி யாரும் நடந்துக்கக் கூடாதேனு தான் எனக்குக் கவலையாய் இருக்கு" மலர் தன் மனத்திலுள்ள சங்கடத்தைக் கூற,

"அதெல்லாம் பொண்ணுகளுக்குக் கல்யாணம்னு ஒன்னு ஆகிட்டா, அந்தக் குடும்பத்துக்குள்ள தன்னைப் புகுத்திக்கிட்டு, இருக்கச் சூழலை ஏத்துக்கிட்டு வாழுற பக்குவம் தானா வந்துடும்" என்றார் மாணிக்கம்.

"அது வந்துடும்ங்க. ஆனா அப்படி ஒரு கெட்ட சூழல்ல நம்ம பொண்ணை நாமளே பிடிச்சி தள்ளிவிட்டுட்டு அட்ஜஸ்ட் பண்ணி வாழுனு சொல்ல கூடாதுல. அவளுக்கு ஏத்த சூழலா இருக்கக் குடும்பமா பார்த்து கட்டி வைக்கிறது தானே பெத்தவங்களா நம்மளோட கடமை! அதைச் சொன்னேன்! அகிலன் குடும்பம் அப்படி இருக்குமானு ஒரு பெரிய சந்தேகம் எனக்கு இருந்துட்டே இருக்கு" கவலை தோய்ந்த குரலில் கூறினார் மலர்.

"எதுனாலும் அகிலன் பார்த்துப்பான்மா. அவனுக்கு நம்ம பொண்ணு மேல காதல் அதிகம். அவனை நம்பி தான் நானும் மதுவும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம்" என்றார் மாணிக்கம்.

"எப்படியோ கடவுள் அருளால் நம்ம பொண்ணு சந்தோஷமா வாழ்ந்தா போதும் எனக்கு" என்று அத்துடன் இப்பேச்சை முடித்துக் கொண்டார் மலர்.

ஆனால் இதைப் பற்றி அகிலனிடம் பேச வேண்டுமென மனத்தில் எண்ணிக் கொண்டார் மாணிக்கம்.

நிச்சயதார்த்த தினத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே மாணிக்கம் குடும்பத்தினர் அந்தக் குடியிருப்பை விட்டு வந்து தங்களது சொந்த இல்லத்திலேயே குடிப் புகுந்திருந்தனர்.

அந்தக் குடியிருப்பிலுள்ள இல்லத்தை வாடகைக்கு விட்டிருந்தனர்.

அகிலன் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சில நாள்களுக்கு முன்பு தங்களது சொந்த இல்லத்தில் கிரகபிரவேஷம் செய்து குடிப் புகுந்தனர்.

மாணிக்கம் இல்லத்திலிருந்து இந்த இல்லம் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

அகிலனின் இல்லம் அவர்களது அலுவலகத்திற்குச் சற்று அருகிலேயே இருந்தது.

நிச்சயத்திற்குப் பிறகான நாட்களில் காதல் பறவைகளாய் தான் அகிலனும் ஆதினியும் வலம் வந்தனர்.

அலுவலகத்தில் ஒன்றாய் அமர்ந்து உணவை உண்பது, தினமும் கைப்பேசியில் குறுஞ்செய்திகள் அனுப்புவது எனத் தங்களது காதலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்திருந்தனர்.

அகிலனின் தங்கை மீனாளும் ஆதினியும் இந்த இடைப்பட்ட நேரத்தில் நல்ல நட்புறவாய் பழகினர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் காலை மண்டபத்திற்கு அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, கையில் வைத்த மருதாணியுடன் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஆதினி.

மலர் அவளின் அறைக்குச் சென்று அனைத்து பொருட்களும் எடுத்து வைத்து விட்டாளாவெனப் பார்க்க, எங்கோ வெறித்து நோக்கியபடி கண்ணீருடன், அதைத் துடைக்கவும் மனமற்று அமர்ந்திருந்தாள் ஆதினி.

அச்சமயம் மதுரனும் அவளறைக்கு வந்து பார்த்தான்.

அவள் அழுவதைப் பார்த்து தன் தாயிடம் கண் சிமிட்டி என்னவென்று கேட்க, உதட்டைப் பிதுக்கிய அவரோ ஆதினியின் அருகினில் அமர்ந்து அவள் தோளைத் தொட்டார். திடுக்கிட்டு தாயை நோக்கியவளோ அவரின் தோளில் சாய்ந்து தேம்பி அழவாரம்பித்தாள்.
 
"இது இனி என் ரூம் இல்லைல! நான் இல்லைனு இந்த ரூமை யாருக்காவது விட்டீங்கனா அவ்ளோ தான்" கூறிக் கொண்டே தேம்பித் தேம்பி அழுதாள்.

மாணிக்கமும் அந்நேரம் அங்கு வந்து நின்றார்.

"அட லூசே இந்த ரூமை வேணா உனக்கு எழுதி வைக்கச் சொல்லிடுறேன்" என மதுரன் அவளைக் கேலி செய்ய,

"போடா" என அவனிடம் சிணுங்கியவள், மாணிக்கத்தைக் கண்டதும், "அப்பா" என அவரைக் கட்டிபிடித்து அழவாரம்பித்தாள்.

"நீங்க தினமும் ஊட்டுற ஒரு வாய் சாப்பாடில்லாம எப்படிப்பா சாப்பிடுவேன்" அவள் அழுகை விம்முலுடன் கூற,

"அது தானா உன் கவலை! அகிலனை ஊட்டச் சொல்றேன்" என்று அதற்கும் மதுரன் சிரித்துக் கொண்டே கேலியாய் கூற,

"அப்பா.. நான் இல்லைனாலும் எனக்கு இங்கிருக்க உரிமை அப்படியே தான் இருக்கனும் சொல்லிட்டேன். உங்களைக் கட்டி பிடிச்சுக் கொஞ்சலாம் எனக்குத் தான் உரிமை இருக்கு" என அழுகையினூடே கூறியவள்,

"இனி எனக்கு மனசு சங்கடமா இருந்தா யாருகிட்ட போய்ச் சொல்லி மடி சாஞ்சிக்குவேன்" என்று அழுதாள்.

மாணிக்கத்திற்கும் துக்கம் தொண்டையை அடைக்க,

"அதுக்குத் தானே உனக்கு ஒரு அடிமையைக் கட்டி வைக்கிறோம். அவன் உன் சொல் பேச்சு கேட்காம உனக்கு ஒத்துவராத மாதிரி எதுவும் செஞ்சா சொல்லு, அவனை ஒரு வழி பண்ணிடுறேன்" மதுரன் உரைக்கவும் அனைவரும் சிரித்தனர்.

மதுரனை வந்து அணைத்துக் கொண்டவள்,

"உன்ன மாதிரி ஒரு அண்ணா கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கனும்ணா. என்னிக்குமே இதே அன்போட என்கிட்ட இருப்பியாணா? எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு என்னை மறந்துட மாட்டியே" அவளின் கேள்வியில் இத்தனை நேரம் கிண்டல் செய்தவனின் மனமுமே கசிந்துருக,

"நீ என் பாப்பாடா! நான் எப்படி உன்னை மறப்பேன்" அவளை அணைத்துத் தொண்டை கமற உரைத்தவன்,

"இது உன் வீடு! நாங்க உன் மேல வச்சிருக்க அன்பு உரிமை எல்லாம் எப்பவும் மாறாது! தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காம கல்யாணப் பொண்ணா கல்யாணக் கனவோட ஹேப்பியா கிளம்பிவியாம்" என அவளின் கன்னம் கிள்ளி உரைத்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றான்.

மாணிக்கத்தை மலர் தேற்றிக் கொண்டு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

அன்றைய இரவு வெகு விமர்சையாய் வரவேற்பு முடிந்ததும், மணமகள் அறையில் அமர்ந்திருந்தனர் மாணிக்கத்தின் குடும்பத்தினர். இன்பமாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர் அனைவரும்.

அச்சமயம் எவரோ உள்ளே நுழையும் ஓசை கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க, "மாமா, அத்தை, குட்டிப்பொண்ணு, மதுப்பையா! எல்லாரும் எப்படி இருக்கீங்க?" உற்சாகமாய்க் குரல் கொடுத்துக் கொண்டே வந்தமர்ந்தான் அர்ஜுன்.

"அஜு அண்ணா எப்படி இருக்கீங்க? அண்ணி பாப்பாலாம் வரலையா?" என அவனுக்கு ஏத்த அதே உற்சாக மிகுதியில் கேட்டாள் ஆதினி.

வரவேற்பிற்காக அணிந்திருந்த ஆடையும் கல்யாணக் களையும், ஆதினியின் முகத்தை வெகு பொலிவாய் காண்பிக்க, "குட்டிப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கமா" என ஆதினிக்குச் சுத்திப் போட்ட அர்ஜுன், "பசங்களுக்குப் பரீட்சை இருந்தனால கூட்டிட்டு வர முடியலைமா" என்றான்.

"ஏண்ணா கூட்டிட்டு வரலை! எல்லாரும் வரனும்னு உன்னைக் கேட்டு தானே இந்தத் தேதியை முடிவு செஞ்சோம்" அவர்கள் வராததில் இவள் குறைப்பட்டு உரைக்க,

"எனக்காக நீங்க தேதி மாத்த வேண்டாமேனு தான் நான் இதுவே இருக்கட்டும்னு சொன்னேன்" என்றான் அர்ஜூன்.

"ஏன் அர்ஜுன், எங்களுக்குச் சொந்தம்னு இருக்கறது நீ தானேடா! நீயே இப்படிப் பண்ணலாமா? இல்ல நீ எங்களைச் சொந்தமா நினைக்கலையா?" மலர் கோபமாய்க் கேட்க,

"என்ன அத்தை இப்படிப் பேசுறீங்க? அப்படிலாம் இல்ல அத்தை" என்றான்.

"என்கிட்ட பேசாத நீ?" என மலர் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,

"மாமா.. சொல்லுங்க மாமா" பாவமாய் மாணிக்கத்தைப் பார்த்து தனக்கு உதவுமாறு அழைத்தான்.

"எனக்கு ஒன்னும் தெரியாது! நீயாச்சு உன் அத்தையாச்சு" என்பது போல் தோளை உலுக்கிக் கொண்டு நின்றார் அவர்.

திரும்பி மதுரனை அர்ஜுன் பார்க்க, "அண்ணாவை மன்னிச்சிடலாம்மா! அவரோட பொண்ணு கல்யாணத்துக்கு இப்படி ஒத்தையா போய் நின்னு பழி வாங்கிடலாம்" அர்ஜுன் கூறவும்,

அவனின் சொல்லில் "அடேய்" எனப் பதறிய அர்ஜுன், "இது தான் நீ ஹெல்ப் பண்ற லட்சணமாடா" என அவனின் தலையில் குட்டியவன்,

"எனக்குப் பொண்ணு பார்த்துக் கல்யாணம் செஞ்சி வச்சதே நீங்களும் மாமாவும் தானே அத்த! என் பிள்ளைகளுக்கு என் சைட்ல சொந்தம்னு இருக்கிறது நீங்க தானே! நீங்க இல்லாம என் பிள்ளைங்க கல்யாணம் கண்டிப்பா நடக்காது" காலம் நேரம் பாராது அர்ஜுன் வார்த்தையை விட, "அப்ப நாங்க மட்டும் எப்படி நீ இல்லாம உன் குடும்பம் இல்லாம கல்யாணம் செய்வோம்னு நினைச்ச?" என மீண்டும் கோபமாய் கூறினார் மலர்.

"இல்ல அத்த! நம்ம பாப்பாக்கு ரொம்ப நாள் கழிச்சு ஒரு வரன் அமைஞ்சிருக்கு! என்னால இந்தக் கல்யாணம் டிலே ஆக வேண்டாமேனு நினைச்சேன்! மன்னிச்சிருங்க அத்த" மலரின் கரம் பற்றிக் கண்களைச் சுருக்கி வேண்டுதலாய் அவன் கூறவும்,

"உன்னோட ஆசிர்வாதம் என் பொண்ணுக்கு கிடைச்சா, அது ஆயாவே வந்து ஆசிர்வதிச்சதுக்குச் சமம் அர்ஜுன். ஆயா எனக்கு அம்மாவா தான் இருந்தாங்க! உன்னை வேற ஆளா நாங்க என்னிக்குமே பார்த்ததே இல்ல" என்றார் மலர்.

"உங்க மனசு எனக்குத் தெரியாத அத்த" எனக் கூறியவன், "நான் முதல்ல மாப்பிள்ளைய பார்க்கனும்! நம்ம வீட்டுக் குட்டிப் பொண்ணக் கட்டிக்கப் போறவன் எப்படி இருக்கானு பார்க்கனும்" என்று கேட்டான்.

மாணிக்கமும் மதுரனும் அவனை அகிலனிடம் அழைத்துச் சென்றனர்.

அர்ஜுனை ஆயாவின் பேரன் என அறிமுகம செய்து வைத்து அவனைப் பற்றிய விவரங்களை உரைத்தார் மாணிக்கம்.

"அர்ஜுன் பெங்களூர்ல ஃபேமிலியோட இருக்கான்! கல்யாணத்துக்குப் பிறகு பெங்களூர்ல வேலை மாத்தலாகவும் அங்க செட்டில் ஆகிட்டான்" என மாணிக்கம் கூறவும் அனைவரும் ஒன்றாய் சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்ப,

"நான் அகிகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்" எனக் கூறி அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டார் மாணிக்கம்.

"என்ன மாமா பேசனும் சொல்லுங்க" என்றான் அகிலன்.

அந்த மண்டபத்தின் மொட்டை மாடியில் இருவரும் நின்றிருக்க, அங்கு வீசிய சில்லென்ற காற்றைச் சுகித்துக் கொண்டே பேசவாரம்பித்தார் அவர்.

"கண்ணம்மா ரொம்ப அமைதியான பயந்த சுபாவமுள்ள பொண்ணு! மனசுல உள்ளதை வெளிப்படையா பேச மாட்டா! அவளோட முகத்தைப் பார்த்தே நாங்க கண்டுபிடிச்சுக் கேட்டா தான் சொல்லுவா! அவளால யாருக்கும் கஷ்டம் வரக் கூடாதுனு எதுவும் வெளிய சொல்லிக்கவே மாட்டா! அவளை நாங்க இது வரைக்கும் அதட்டி கூடப் பேசினது இல்ல. எல்லாத்தையுமே எப்பவுமே சரியா செஞ்சிடுவா! அப்படி எதுவும் தவறா செஞ்சாலும் எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்கிட்டு திருத்திப்பா! நாங்கனு இல்ல அவ படிச்ச ஸ்கூல்ல இருந்து இப்ப வேலை பார்க்கிற இடம் வரை எல்லாமே அவளுக்கேத்த மாதிரி அன்பா பண்பா பேசி சொல்லி கொடுக்கிறவங்களும், வேலை வாங்குறவங்களும் தான் அவளுக்கு அமைஞ்சாங்க!" கூறிக் கொண்டே அகிலன் முகம் அவர் பார்க்க,

"அவளை யாரும் எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கனும்! முக்கியமா என் அம்மா எதுவும் அவளை ஹர்ட் செய்யாம நான் பார்த்துக்கனும் அதைத் தானே இப்படிச் சுத்தி வளைச்சு சொல்ல வரீங்க" மென்மையாய் சிரித்துக் கொண்டே மாணிக்கத்தைப் பார்த்துக் கேட்டான் அகிலன்.

அன்பின் பரிதவிப்பைக் கண்களில் தேக்கி அவனின் கரம் பற்றியவராய்

"அவ மனம் நொந்து அழுதா எங்க மனசு தாங்காதுடா அகி! ரொம்பவே பாசமா வளர்த்துட்டோம்! அதான் எல்லாரும் ரொம்பப் பயப்படுறோம்! அவளுக்கு எங்களோட இந்தப் பயம் பத்திலாம் தெரியாது! நீ அவளை நல்லா பார்த்துப்பனு ரொம்ப நம்பிக்கையோட தான் இருக்கா" என்று உரைத்தார்.

அவரைப் பார்த்து சிரித்தவன், "பொண்ணு வீட்டுக்காரங்க கல்யாணத்துக்கு முன்னாடி நாள் பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணி தான் கேள்விபட்டிருக்கேன் மாமா ஆனா மாப்பிள்ளைக்கு அட்வைஸ் செய்றவங்களை இப்ப தான் பார்க்கிறேன்!" எனக் கேலியாய் உரைத்தவன்,

"என்கிட்ட எந்தவித தயக்கமில்லாம நீங்க இப்படிப் பேசுறதே மனசுக்கு அவ்ளோ நிறைவா இருக்கு மாமா. கவலைப்படாதீங்க! அவ என் பொண்டாட்டி! அவளை நல்லா பார்த்துக்க வேண்டியது புருஷனா என்னுடைய கடமை. அதை நான் கண்டிப்பா தவறாம செய்வேன்" என்றான்.

தவறாமல் செய்வேன் என்றவனைத் தவறு செய்ய வைத்தது விதியின் செயலோ?

அவனின் இந்தப் பேச்சில் தான் மாணிக்கத்திற்கு மனம் தெளிந்தது.

அவனிடம் விடைபெற்று அவர் செல்ல, அங்கு ஆதினியோ உறக்கம் வராமல் உருண்டுப் புரண்டுப் படுத்திருந்தாள்.

"என்னடா கண்ணம்மா! தூக்கம் வரலையா?" எனக் கேட்டுக் கொண்டே மாணிக்கம் அவளருகில் வந்தமர, மாணிக்கத்தின் சத்தத்தில் விழித்த மலரும் எழுந்தமர்ந்தார்.

தனது தலையைத் தந்தையின் மடியில் வைத்துப் படுத்தாள் ஆதினி.

"ரொம்பப் பயமா இருக்குப்பா!" மடியிலிருந்து தலையை அவர் முகம் நோக்கித் திருப்பியவளாய் அவள் கூற,

குனிந்து அவள் நெற்றியில் ஆதுரமாய் முத்தமிட்டவர், "எதுக்குடா பயம்! நீ புதுசா ஆபிஸ்க்கு போனப்ப உனக்கு அங்க யாரையுமே தெரியாது தானே! அங்க இருக்க வேலையும் தெரியாது தானே! ஆனா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு அங்க இருக்க ஆளுங்களையும் பழக்கமாக்கிட்டுனு இருக்கப் பழக்கிட்டல! ஆனா இங்க உனக்காக அகிலன் அவனோட அம்மா அப்பானு எல்லாரும் இருக்காங்க! எல்லாருக்கும் உன்னை நல்லாவே தெரியும்! இந்தக் கவலை உனக்குத் தேவையில்லடா!" அவளுக்குக் கூறுவது போல் மலருக்கும் சேர்த்தே உரைத்தார் மாணிக்கம்.

மணப்பெண்ணிற்குரிய அச்சமும் பூரிப்பும் ஒரு சேர ஆட்டுவித்தது ஆதினியை. முழுமையாய் இந்த இன்பத்தை அனுபவிக்க இயலாதவாறு ஏதோ ஓர் அச்சம் அவளின் மனத்தை சூழ்ந்திருந்தது.
 
மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் ஆதினி பச்சை வண்ண பட்டுடுத்தி அகிலனின் அருகில் அமர, அவள் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டினான் அகிலன்.


அனைத்துச் சாங்கிய சம்பிரதாயங்கள் முடிந்த பின் காலை உணவை உண்டுவிட்டு ஆதினியை தங்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர் அகிலன் வீட்டினர்.


நாத்தனாராய் அல்லாது ஆதினியின் தோழியாய் உடனிருந்தாள் மீனாள்.


அகிலனின் இல்லத்தில் மாப்பிள்ளை பெண்ணிற்குப் பால் பழம் வழங்கியவர்கள் திருமணத்தைப் பதிவு செய்யவென அழைத்துச் சென்றனர்.


அனைத்தும் முடிந்து அவர்கள் சற்று ஓய்வாய் அமரும் போது மாலை ஆறு மணியைக் கடந்திருந்தது.


அன்றைய இவர்களுக்கான இரவிற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்க, அகிலனின் அன்னையும் தந்தையும் ஆதினியின் வீட்டிலிருந்து வந்த சீர் சாமான்களை ஒதுங்க வைக்கும் வேலையில் படு பிசியாய் ஈடுபட்டிருந்தனர்.


அன்றிரவு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து வெகு மகிழ்வாய் கிண்டல் கேலியுமாய்ப் பேசி சிரித்து உணவு உண்டிருந்தனர்.


ஆனால் ஆதினியை கண்ட அகிலனுக்கு அவள் ஏதோ சஞ்சலத்தில் இருப்பதாய் தோன்றியது.


அவளருகில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தவனோ என்னவென்று அவளின் காதில் கேட்க, ஒன்றுமில்லையெனத் தலை அசைத்து குனிந்து கொண்டாள். வெட்கத்தில் தலை குனிகிறாளென எண்ணியவன் சிரித்துக் கொண்டான்.


அன்றைய அவர்களுக்கான இரவில் அவர்களின் அறையில் ஆதினி வெகு பதட்டமாய் அமர்ந்திருக்க, அவளருகில் அமர்ந்து அவளின் பதட்டத்தை ரசித்திருந்தான் அகிலன்.


இந்த இரவின் தேடலை எண்ணி அவள் பதட்டம் கொள்கிறாளென நினைத்து அவளின் முகப் பாவங்களை ரசித்துச் சிரித்திருத்தான்.


"ஏன் இந்தப் பதட்டம்? நீ ரிலாக்ஸ்டா ஃப்ரீயா இரு முதல்ல" அவளைத் தன்னை நோக்கி திருப்பிக் கூறியவன் அவளின் கரம் பற்ற, பயத்தில் வியர்வையில் குளித்துப் பிசுபிசுத்திருந்தது அவளது உள்ளங்கை.


"இப்படியாடா பயப்படுவ" அவளை இயல்பாக்கும் பொருட்டு ஆதூரமாய் அவன் தழுவித் கொள்ள, அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.


"ஏன் எதுக்கு உனக்கு இந்தப் பயம்? அதை முதல்ல சொல்லு" அவள் முகத்தை நிமிர்த்திக் கண்களை நோக்கிக் கேட்டான்.


எச்சில் கூட்டி விழுங்கியவள், "இதை எப்படிக் கூறுவது?" என மனத்திற்குள் எண்ணியது அவளின் முக உணர்வுகளாய் வெளிப்பட,


"என்னடா கண்ணுமா! என்னாச்சு? நான் உன்னை ரேப் பண்ணிடுவேன்னு நினைச்சு பயந்துட்டியா?" அவளை இயல்பாக்கும் பொருட்டு இவ்வாறாய் கேட்டுச் சிரித்தான்.


இல்லையெனத் தலை அசைத்தவள், "எனக்கு.. அது வந்து.. எனக்கு" வார்த்தைத் தந்தியடிக்க,


"நீங்க இன்னிக்கு ரொம்ப ஆசையா இருந்திருப்பீங்க... ஆனா எனக்கு" தயங்கித் தயங்கிக் கூற வந்ததைச் சொல்ல முடியாமல் கண்கள் கலங்க அவனை அவள் நோக்க,


"என்னடா கண்ணுமா! என்கிட்ட என்ன பயம் உனக்கு! இன்னிக்கு இதெல்லாம் நடக்க வேண்டாம்னு நீ நினைச்சீனா இன்னிக்கு எதுவும் வேண்டாம் சரியா!" அவளைத் தேற்றும் பொருட்டு கூறினான்.


"எனக்குப் பீரியட்ஸ் ஆகுற மாதிரி இருக்குப்பா! வயிறு ஒரு மாதிரி வலிக்குதுப்பா" அழுகையினூடே கூறி அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.


முதலில் அவள் கூறியது புரியாது விழித்தவன், புரிந்த பின் சற்று அதிர்ந்து திகைத்துப் பின் இயல்பாகி, அவளை அணைத்து தலையைக் கோதினான்.


"நீங்க எவ்ளோ ஆசையோட இருந்திருப்பீங்க! ரொம்ப டிஸ்அப்பாய்ண்ட் பண்ணிட்டேன் தானே! சாரிப்பா" என அழுகையினுடன் கூடிய விம்மலுடனே கூறினாள்.


"உன் உடல்நிலை விட இதைத் தான் நான் முக்கியம் நினைச்சு உன் மேல கோபப்படுவேனு நினைச்சியா! அப்படிக் கோபப்பட்டா நான் மனுஷனே இல்ல, அரக்கன்" தன்னை அவள் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் சற்று கோபமாய் உரைத்தவன்,


"எனக்கும் அம்மா தங்கச்சிலாம் இருக்காங்க. இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க படுற கஷ்டமெல்லாம் எனக்கும் தெரியும்! நீ எதுவும் நினைச்சு கஷ்டபடாம நிம்மதியா தூங்குடா" அவளின் நெற்றியில் இதழ் பதித்து உரைத்தான்.


அவளைப் படுக்க வைத்து அருகில் அவன் படுத்திருக்க, அவனின் முகத்தையே ஏக்கமாய் பார்த்திருந்தாள்.


அவளின் தேவையைப் புரிந்து கொண்டவனோ சற்றாய் எழுந்து சாய்ந்தமர்ந்து இரு கரம் நீட்டி கண் சிமிட்டி அவளை அருகிலழைக்க, அவனின் கைவளைக்குள் தன்னைப் புகுத்து கொண்டாள் ஆதினி.


அவனின் மார்பில் தலை வைத்து இடையைக் கட்டி கொண்டு அவள் படுத்திருக்க, அவளின் தலையையும் முதுகையும் வருடினான் அவன்.


"எனக்குப் பீரியட்ஸ் இர்ரெகுலர் ஆகும்ப்பா. இப்ப கூட ஒரு மாதிரி அன்னீசியா தான் இருக்கே தவிரப் பீரியட்ஸ் ஆகிட்டுனுலாம் இல்ல!"


நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா என்பது போல் நிமிர்ந்து அவனை அவள் பார்க்க,


"ஹ்ம்ம் புரியுதுடா" என்றான்.


"நாளைக்கு நான் நார்மல் ஆகிட்டேன்னு சொன்னா, உங்களை நான் ஒதுக்கி வைக்க இன்னிக்கு இப்படிப் பொய் சொல்லிட்டதா நீங்க நினைக்கக் கூடாது" பரிதவித்த பார்வையுடன் அவனை நோக்கிக் கேட்டாள்.


"இல்லடா அப்படிலாம் நினைக்க மாட்டேன்! என் கண்ணுமாவ பத்தி எனக்குத் தெரியாதா? அவ பொய் சொல்ல மாட்டா! பயந்தா கூட உண்மைய தான் பேசுவா" அவள் உச்சியில் இதழ் பதித்துக் கூறினான்.


அவன் கூறியதில் ஏற்பட்ட ஆனந்தத்தில் அவன் கன்னத்தைத் தன் இதழால் தீண்டியிருந்தாள்.


இன்னமும் அவளின் கண்களில் நீர் திரண்டு கண்களுக்குள்ளேயே நின்றிருக்க, அவளிமைகளில் அவன் அழுத்தமாய் முத்தமிட, திரண்டிருந்த நீர் கரை கடந்து அவளது கன்னத்தை நனைத்தது. அதை அவன் தன் இதழால் ஒற்றியெடுக்க உப்பு நீரின் உவர்ப்பை உணர்ந்தான் இம்முத்தத்தில்.


மனம் நிறைந்து ததும்ப அவனின் மார்பிலேயே பல முத்தங்களையிட்டு துயிலுற்றாள் ஆதினி.


உறங்கியவளை தனதருகே படுக்க வைத்து, அவளின் இடையை அணைத்து படுத்திருந்தவனுக்கோ வெகு நாளைய காத்திருப்பின் பொக்கிஷம் தனது கைகளில் தவழும் சந்தோஷம் நெஞ்சை நிறைக்க, சுகமான நித்திரை அவனை ஆட்கொண்டது.


-- தொடரும்


தொடர்ந்து வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பேரன்புகளோடு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️
 
முள்ளில் பூத்த மலரே..!
எழுத்தாளர்: நர்மதா சுப்ரமணியம்
(அத்தியாயம் - 20 & 21)


அப்பாடா...! ஒரு வழியா கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு
அது நடக்குமோ, நடக்காதோன்னு கொஞ்சம் திகிலாவே இருந்தது. ஆனால் இப்பக் கொஞ்சம் பதட்டம் குறைஞ்சிடுச்சு. இப்ப திரும்பவும் ஃபர்ஸ்ட் நைட் நடக்காததால அதுவும் டென்ஷனா இருக்குது. இப்படியே தள்ளிப் போயிடுமோன்னு. அதுவும் இல்லாம இந்த அகியோட அம்மா சத்யாவை நினைச்சால் இன்னும் கொஞ்சம் நிறையவே டென்ஷனா இருக்கு. ஏன்னா, சத்யாவுக்கு இன்னை வரைக்கும் தன் தாய் வீட்டு குடும்பத்தோட ஒட்டும் உறவும் இல்லையே என்கிற குறை இருந்துக்கிட்டே இருக்கு. ஆனால், ஆதினிக்கு அம்மா, அப்பா, அண்ணன் என்கிற அத்தனை உறவும், பிறந்த வீட்டு உறவும் இருக்கிறதால.....
இதுவே பிரச்சினைக்கு வழி வகுத்திடுமோன்னு பதட்டாம இருக்கு.. ஏன்னா, சத்யா இன்னை வரைக்கும் அது கிடைக்கலைன்னுத் தானே எடுத்ததுக்கெல்லாம் புருசனோட சண்டை போட்டுட்டு இருக்கிறாள்.


ஸோ... சில நேரத்துல தனக்கு கிடைக்காதது மத்தவங்களுக்கு கிடைச்சிட்டால் அதுவே குடும்பத்து ஒத்துமையை குலைக்க பொறாமை என்கிற ஆயுதமே அஸ்திவாரமா அமைஞ்சிடுமோன்னு தோணுது. அதுவுமில்லாம
மலருக்கும் ஏதோவொரு உறுத்தல் இருந்திட்டேத்தான் இருக்குது. அதுவொரு இன்னர் இன்ஸ்டின்கட்டா கூட இருக்கலாம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
முள்ளில் பூத்த மலரே..!
எழுத்தாளர்: நர்மதா சுப்ரமணியம்
(அத்தியாயம் - 20 & 21)


அப்பாடா...! ஒரு வழியா கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு
அது நடக்குமோ, நடக்காதோன்னு கொஞ்சம் திகிலாவே இருந்தது. ஆனால் இப்பக் கொஞ்சம் பதட்டம் குறைஞ்சிடுச்சு. இப்ப திரும்பவும் ஃபர்ஸ்ட் நைட் நடக்காததால அதுவும் டென்ஷனா இருக்குது. இப்படியே தள்ளிப் போயிடுமோன்னு. அதுவும் இல்லாம இந்த அகியோட அம்மா சத்யாவை நினைச்சால் இன்னும் கொஞ்சம் நிறையவே டென்ஷனா இருக்கு. ஏன்னா, சத்யாவுக்கு இன்னை வரைக்கும் தன் தாய் வீட்டு குடும்பத்தோட ஒட்டும் உறவும் இல்லையே என்கிற குறை இருந்துக்கிட்டே இருக்கு. ஆனால், ஆதினிக்கு அம்மா, அப்பா, அண்ணன் என்கிற அத்தனை உறவும், பிறந்த வீட்டு உறவும் இருக்கிறதால.....
இதுவே பிரச்சினைக்கு வழி வகுத்திடுமோன்னு பதட்டாம இருக்கு.. ஏன்னா, சத்யா இன்னை வரைக்கும் அது கிடைக்கலைன்னுத் தானே எடுத்ததுக்கெல்லாம் புருசனோட சண்டை போட்டுட்டு இருக்கிறாள்.


ஸோ... சில நேரத்துல தனக்கு கிடைக்காதது மத்தவங்களுக்கு கிடைச்சிட்டால் அதுவே குடும்பத்து ஒத்துமையை குலைக்க பொறாமை என்கிற ஆயுதமே அஸ்திவாரமா அமைஞ்சிடுமோன்னு தோணுது. அதுவுமில்லாம
மலருக்கும் ஏதோவொரு உறுத்தல் இருந்திட்டேத்தான் இருக்குது. அதுவொரு இன்னர் இன்ஸ்டின்கட்டா கூட இருக்கலாம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
மிக்க நன்றி சிஸ் ❤️
 
சேர்ந்தாற்போல ரெண்டு எபிசோட் கொடுத்து கல்யாணத்தை சிறப்பா முடிச்சு வச்சுட்டீங்க 🥳🥳🥳 ஆனால் சந்தோஷப் பட விடறீங்களா? 🤔காதலர்கள் ஆவலாய் எதிர் பார்க்கும் கல்யாண இரவில் கை வச்சுட்டீங்க 😜😉🥰. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு 😂😂😂.

மலரும், மாணிக்கமும் மகளை இப்படி பயந்தாங்கொள்ளியா வளர்த்திருக்க வேண்டாம்😂. மாமியார் சத்தமா பேசினாலே மயங்கிடுவா போலவே?😔

மாமனார், மகனுக்கு கல்யாணத்துக்கு முதல் நாள் அட்வைஸ் பண்ணினது சத்யா கேட்கல😂. தெரிஞ்சா கல்யாணம் நடந்த மாதிரி தான். நல்லவேளை காதலர்கள் பாவத்தை ரைட்டர் சம்பாதிக்கல.😜😍
 
சேர்ந்தாற்போல ரெண்டு எபிசோட் கொடுத்து கல்யாணத்தை சிறப்பா முடிச்சு வச்சுட்டீங்க 🥳🥳🥳 ஆனால் சந்தோஷப் பட விடறீங்களா? 🤔காதலர்கள் ஆவலாய் எதிர் பார்க்கும் கல்யாண இரவில் கை வச்சுட்டீங்க 😜😉🥰. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு 😂😂😂.

மலரும், மாணிக்கமும் மகளை இப்படி பயந்தாங்கொள்ளியா வளர்த்திருக்க வேண்டாம்😂. மாமியார் சத்தமா பேசினாலே மயங்கிடுவா போலவே?😔

மாமனார், மகனுக்கு கல்யாணத்துக்கு முதல் நாள் அட்வைஸ் பண்ணினது சத்யா கேட்கல😂. தெரிஞ்சா கல்யாணம் நடந்த மாதிரி தான். நல்லவேளை காதலர்கள் பாவத்தை ரைட்டர் சம்பாதிக்கல.😜😍
ஹா ஹா ஹா.. ஃபர்ஸ்ட் நைட்ல கை வச்சா தான் கதை த்ரில்லிங்கா போகும் 🤣🤣🤣 ரைட்டர் வேலையை செய்யனும்ல 😝😛 மிக்க நன்றி சிஸ் ❤️
 
Back
Top